Breaking News

மட்டு-போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அட்டகாசம் செய்துவந்த 4 தொன்- காட்டு யானை பிடிபட்டது.படங்கள்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அட்டகாசம் செய்துவந்த யானையை போரதீவுப்பற்று வேத்துச்சேனை  கம்பி ஆறு பிரதேசத்தில்  வைத்து  வன ஜீவராசிகள்  திணைக்கள அதிகாரிகள் இன்று (10) சனிக்கிழமை காலை பிடித்துள்ளனர்.

3 நாட்களாக   இப்பிரதேசத்தில்  தங்கி இருந்த அதிகாரிகள்   மேற் கொண்ட  நடவடிக்கையின்  ஓர் அங்கமாகவே இந்த காட்டு யானை  பிடிபட்டது.

மேற்படி யானை  போரதீவுப்பற்று  பிரதேச  செயலாளர்  பிரிவில்  கிராம வாசிகளை  கொன்றதுடன், அச்சுறுத்தி வந்தது  எனவும்  தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு  மாகாண  வன  ஜீவராசிகள் திணைக்களத்தின் மிருக வைத்தியர் நிகால்  புஷ்பகுமார  தலைமையிலான   விஷேட  வைத்தியர் குழு மற்றும்  வன  ஜீவராசிகள்   திணைக்களத்தின் 18 அதிகாரிகள், மேற்கொண்ட  நடவடிக்கையின் போதே இவ் யானை  அகப்பட்டது.

இந்த  யானை 40 வயதுடையது  எனவும் 4 தொன் எடையுடையது எனவும்,வைத்தியர்  நிகால்  தெரிவித்தார்.

இக் காட்டு  யானை   மருத்துவ  சிகிச்சைகளின்  பின்பு ஹொறவப்பொத்தானை யானைகள் சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

மேற்குறித்த போரதீவுப்பற்று பிரதேச எல்லைக் கிராமங்களில் இடம்பெற்றுவரும் யானைகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் வகையில் நிரந்தரமான தீர்வை எட்டுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்ட செயற்பாட்டின் நடவடிக்கையினாலும், கடந்த திங்கட்கிழமை போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன்னால் இப் பிரதேசக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாலும் ,அவர்களைச் சந்தித்த அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பத்து நாட்களுக்குள் பிரச்சினைக்குரிய யானைகளை வேறு இடத்திற்கு அகற்றுவது என்றும், அதுவரையில் பாதுகாப்புப் படையினரையும் வனவிலங்கு பரிபாலன திணைக்களத்தினருடன் சேவையில் ஈடுபடுத்துவது என்றும், அதே நேரத்தில் யானைகள் தங்கி நிற்கும் பற்றைக் காடுகளை துப்பரவு செய்வது என்றும் முடிவுகளை அறிவித்திருந்ததன்படி காடுகள் துப்பரவு செய்யும் வேலைகள் நடைபெற்று விஷேட வைத்தியர்கள் அடங்கிய குழு மட்டக்களப்புக்கு வருகை தந்து யானைகளை பிடித்துச் செல்வதற்கான நடவடிக்கையின்  ஓர் அங்கமாகவே இந்த காட்டு யானை  பிடிபட்டமை குறிப்பிடத்தக்கது.