மாமறைக்கு ஒர் மாநாட்டின் தீர்மானங்கள்
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா இஸ்லாமிய தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் மாமறைக்கு ஒரு மாநாடு எனும்
தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய மாநாடு நேற்று 02 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போது மாநாட்டின் இறுதியில் தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸாரினால் 14 முக்கிய விடயங்கள் அடங்கிய மாமறைக்கு ஒர் மாநாட்டின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
அங்கு வாசிக்கப்பட்ட தீர்மானங்களில்
1. மனிதர்களால் உலகில் நிகழ்த்தப்படும் பாவங்களில் மிகப் பெரியது நம்மைப் படைத்த இறைவனுக்கு இணை வைப்பதாகும். எனவே இணை வைத்தலை ஒழித்து ஏகத்துவத்தை நிலை நாட்ட நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
2. இஸ்லாத்தில் திட்டமிட்டு நுழைவிக்கப்பட்ட மத்ஹபுகள், பித்அத் மற்றும் அனாச்சாரங்களை ஒழித்து தூய்மையான இஸ்லாத்தை எடுத்துரைக்க நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என இம்மாநாடு உங்களைக் கேட்டுக் கொள்கின்றது.
3. மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாத மற்றும் தீவிரவாத செயல்களில் யார் ஈடுபட்டாலும் இன, மத, மொழி பேதமின்றி இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.
4. விபச்சாரம், பாலியல் வன்கொடுமை, ஆபாச இணையத்தளங்கள் மற்றும் சினிமாக்களை ஒழிப்பதோடு இதில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களை கடுமையான சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் என இம்மாநாடு இலங்கை அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றது.
5. வட்டி, சூது, மது மற்றும் போதைப் பொருட்களை இலங்கை அரசு உடனடியாக தடைசெய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
6. வட்டி என்ற மிகப் பெரிய கொடுமையிலிருந்து மனித சமூகத்தைக் காத்திட வட்டி இல்லாக் கடன் திட்டத்தை (பைத்துல் மால்) ஒவ்வொரு ஜமாஅத்தார்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் உருவாக்கிட வேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
7. வரதட்சனை கேட்டுவரும் எந்தவொரு ஆண்மகனையும் திருமணம் முடிக்க மாட்டோம், என சகோதரிகள் உறுதி எடுக்க வேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
8. வரதட்சனை கேட்டுவரும் எந்தவொரு ஆண்மகனுக்கும் எங்களது பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்க மாட்டோம் என உறுதி எடுக்குமாறு இம்மாநாடு பெற்றோர்களை வலியுறுத்துகின்றது.
9. மறுமையையும் நீதி விசாரணையையும் பயந்து நடக்கும் உண்மை முஸ்லிம்கள் வாங்கிய வரதட்சனையை அல்லாஹ்வுக்குப் பயந்து உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
10. வரதட்சனை வாங்கி அல்லது கொடுத்து நடாத்தப்படும் திருமணங்களை ஜமாஅத்தார்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் புறக்கணித்து இதுபோன்ற திருமணங்களை நடாத்திக் கொடுக்க வேண்டாம் என இம்மாநாடு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
11. இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் பாதுகாப்பையும் பிற சமூக மக்களுக்கு எடுத்துரைத்து பெண் இனத்தின் கண்ணியத்தை பாதுகாத்திட நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
12. இன, மத, மொழி வேறுபாடின்றி அனைத்து சகோதரர்களிடமும் மனித நேயத்தோடு பழகி இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை நிலை நாட்டிட நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என இம்மாநாடு உங்களை கேட்டுக் கொள்கின்றது.
13. நம் உயிரிலும் மேலான இஸ்லாமிய மார்க்கத்தை பிற மக்களுக்கு எடுத்துரைக்கும் “இஸ்லாமிய அழைப்புப் பணியை” உயிர் மூச்சு இருக்கும் வரை தொடர்ந்து செய்திட வேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
14. அமைப்பின் பெயரால் பிரிந்து கிடக்கும் அனைத்து கொள்கை சகோதரர்களும் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் ஓர் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது. எனவும் மேற்கண்ட தீர்மானங்களை அனைத்து கொள்கை சார்ந்த அமைப்பின் நிருவாகிகளுக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் இலங்கை அரசின் கவனத்திற்கும் அதிகாரபூர்வமாக இன்ஷா அல்லாஹ் தெரிவிக்கப்படும் என தாருல் அதர்அத்தஅவிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் எம்.எஸ்.எம்.நஸார் தெரிவித்தார்.


