ஜப்பான் காரின் விலை இன்று முதல் அதிகரிப்பு
ஜப்பான் காரின் விலை இன்று முதல் அதிகரிப்பு
ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரொன்றின் விலை, ரூபாய் 7 இலட்சத்தில் இருந்து 12 இலட்சம் ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. மோட்டார் கார் உற்பத்தியாளர்களின் பெறுமதியை கவனத்தில் கொண்டு புதிய சுங்கப்பெறுமதியை அரசாங்கம் தீர்மானித்ததையடுத்தே இவ்வாறு விலை அதிகரித்துள்ளது. புதிய சுங்கவரி, இன்று 8ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். அதனடிப்படையில், டொயோடா எக்வா காருக்கான சுங்க வரி 770,000 ரூபாயாலும், டொயோடா எக் ஸிவோ காருக்கான சுங்க வரி 703,000 ரூபாயாலும், டொயோடா பிரம்வோ மற்றும் அலிஓன் கார்களுக்கான சுங்க வரி 655,000 ரூபாயாலும், டொயோடா பிசூஸ் காருக்கான சுங்க வரி 1,120,000 ரூபாயாலும், டொயோடா நெரியர் காருக்கான சுங்க வரி 1,150,000 ரூபாயாலும், டொயோடா மிட்சுபிசி அவுட்லேன்டர் காருக்கான சுங்க வரி 852,000 ரூபாயாலும் அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டுக்குள் வாகனமொன்று இறக்குமதி செய்யப்படும் போது, வாகனத்தின் முழுமையான பெறுமதி மாத்திரமே கடன் சான்றுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட வேண்டுமென, மோட்டார் வாகன இறக்குமதியாளர்களுக்கு, இலங்கை சுங்கத் திணைக்களம் புதிய கட்டுப்பாடொன்றை விதித்துள்ளது. இலங்கை சுங்கத்துக்கு வருடாந்தம் ஏறத்தாழ 4 பில்லியன் ரூபாய் வருமான இழப்பை ஏற்படுத்தும் வாகன இறக்குமதி துஷ்பிரயோகத்தைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, இலங்கை சுங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர். சேமசிங்க, தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். 'இதுவரை காலமும் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையின்படி, இறக்குமதியின் பொது வாகன இறக்குமதியாளரால் வழங்கப்படும் பெறுமதிக்கே வரி அறவிடப்பட்;டு வந்ததோடு, குறைவான பெறுமதி மதிப்பிடல் காரணமாக சுங்கத் திணைக்களத்துக்குப் பெருமளவு வருமான இழப்பு ஏற்பட்டு வந்தது' என, அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, வாகனத்தின் முழுமையான பெறுமதிக்கு வரி அறவிடப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பெறுமதி குறைத்து மதிப்பிடலானது, சில அதிகாரிகளின் உதவியுடனேயே இடம்பெற்று வந்ததாகக் குறிப்பிட்டார்.



