Breaking News

மட்டக்களப்பு, கிராங்க்குளத்தில் 142 மில்லியன் நிதியில் இலங்கையில் முதலாவது கடல் நீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் - படங்கள்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

இலங்கையில் முதன் முறையாக கடல்; நீர் மீன் வளர்ப்பு திட்டத்தினை ஆரம்பிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -கிரான்குளம் தர்மபுரம் பிரதேசத்தில் கடல் நீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலைய கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பு தர்மபுரத்தில் இடம்பெற்றது.

கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் இலங்கை தேசிய நீர்வாழ் அபிவிருத்தி அதிகார சபையினால் அமுல்ப்படுத்தப்படும் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான உதவியின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் 142 மில்லியன்  நிதி அனுசரணையினான ஐக்கிய நாடுகள் உணவு விவசாய ஸ்தாபனத்தின் திட்டத்தின் கீழ் இதற்கான ஆரம்ப கட்ட பணிகள்  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்து கொண்டு குறித்த கடல் நீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலைய கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல்லை நட்டி வைத்ததோடு அதற்கான நினைவு பலகையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.

இந் நிகழ்வில் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ் அபிவிருத்தி அதிகார சபையின்  தலைவர் உபாலி மோட்டி அதன் பணிப்பாளர் நாயகம் நிமால் சத்திரத்ன உட்பட அமைச்சின் அதிகாரிகள், இலங்கை தேசிய நீர்வாழ் அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள்,ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சும் இலங்கை தேசிய நீர்வாழ் அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 142மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் உணவு விவசாய ஸ்தாபனத்தின் திட்டத்தின் கீழ் மேற்படி கடல் நீர் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு -கிரான்குளம் தர்மபுரம் கடற்கரையினை அண்டியதாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.