2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து
தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் டி வில்லியர்ஸ் 73 ரன்கள் குவித்தார். டுமினி 47 ரன்களும், டு பிளிசிஸ் 46 ரன்களும் எடுத்தனர். ஆல் ரவுண்டர் பெஹார்டியன் கடைசி வரை நின்று 23 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து பந்து வீச்சாளர்களில் வேகப்பந்து வீச்சாளர் டாப்ளே 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் ஜேசன் ராய் 11 ரன்களில் ஏமாற்றம் அளித்தாலும், மற்றொரு துவக்க வீரர் ஹேல்ஸ் அபாரமாக விளையாட, அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது.
தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்ட ஹேல்ஸ் அரை சதம் கடந்தார். மறுமுனையில் அவருடன் இணைந்த ரூட் 38 ரன்களும், மோர்கன் 29 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அணியின் ஸ்கோர் 202 ஆக இருந்தபோது ஹேல்ஸ் 99 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அதிரடியாக ஆடிய பட்லர்(48 நாட் அவுட்), மொயீன் அலி (21 நாட் அவுட்) ஆகிய இருவரும் 22 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை உறுதி செய்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹேல்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.



