சிவப்பு அட்டை வழங்கியதால் நடுவரை சுட்டுக்கொன்ற வீரர்!
அர்ஜென்டினா நாட்டில் உள்ள கோர்டோபா மாகாணத்தில் உள்ளூர் அணிகள் மோதிய கால்பந்து போட்டி நடந்தது. போட்டியின் போது ஒரு வீரர் எதிர் அணி வீரரரிடம் முரட்டு தனமாக நடந்து கொண்டார்.
இதனால் அந்த வீரருக்கு நடுவர் சிவப்பு அட்டை காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.
ஆத்திரம் அடைந்த அந்த வீரர் மைதானத்தை விட்டு நடுவரை திட்டியபடியே வெளியேறினார்.
தனது அறைக்கு சென்ற அவர் பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு மைதானத்துக்குள் சென்று தன்னை வெளியேற்றிய நடுவரை சரமாரியாக சுட்டார்.
இதில் தலை, கழுத்து, மார்பு பகுதியில் குண்டு பாய்ந்தது. மேலும் ஒரு வீரர் மீது குண்டு பாய்ந்தது. போட்டி நடந்து கொண்டு இருக்கும்போதே நடுவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை கண்டு மற்ற வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அந்த வீரர் தப்பி ஓடிவிட்டார். நடுவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். காயம் அடைந்த வீரர் உயிர் பிழைத்து விட்டார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



