மட்டு- நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கும் மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் உயரதிகாரிகளுக்குமிடையில் விஷேட சந்திப்பு-படங்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களின் உயரதிகாரிகளுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவுக்குமிடையிலான விஷேட சந்திப்பு ஒன்று நேற்று 05 புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
மேற்படி விஷேட சந்திப்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானினால் அழைக்கப்பட்ட பொலிஸ் உயரதிகாரிகளும்,பதிவாளர்,சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணிகள்,சமுதாயஞ்சார் சீர்திருத்தப்பிரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நாட்டில் சட்டத்தையும்,நீதியையும் நிலை நாட்டுவதற்கு பங்களிப்பு வழங்கும் நோக்கில் சந்தேக நபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளை நிறைவேற்றல்,போக்குவரத்து விதிகளை மீறுவோர், கசிப்பு, சாராயம், போதைவஸ்து பிரச்சினைகளில் சம்பந்தப்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல்,முறைப்பாடுகளை உடனடியாகவும், தமிழ் மொழி மூலமும் பெற்றுக்கொள்ளல்,தகுதிவாய்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றுக்கு வழக்கு நடாத்துவதற்கு அனுப்புதல்,கடுமையான தண்டனைகள் உயர்ந்தபட்ச தண்டப்பணம் மூலமாக குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுத்தல் தொடர்பாகவும், பொலிசார், நீதிமன்றம்,சட்டத்தரணிகள், மக்கள் தொடர்பில் சுமுகமான உறவுகளை பேணுவது தொடர்பாகவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அது தொடர்பில் காத்திரமாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.