Breaking News

மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்கிழமை (24) இரவு மட்டிக்கழி பகுதியில் இருந்து நாவலடி புதுமுகத்துவாரம் கடற்பரப்பில் படகில் மூன்று மீனவர்களுடன் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் (24) இரவு வீசிய கடும் காற்றுக்காரணமாக படகு கவிழ்ந்துள்ளது. இதில் இருந்த ஒருவர் நீந்தி கரைவந்துசேர்ந்த நிலையில் இருவர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஒருவரின் சடலம் செவ்வாய்கிழமை  நள்ளிரவு கரையொதுங்கிய நிலையில் ஒருவரை தேடிவருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் தேடுதலில் ஈடுபட்டுவருகின்றனர். சடலமாக மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு திராய்மடு 08ஆம் குறுக்கை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ந.வசந்தராஜ் (29வயது) எனவும் காணாமல்போனவர் அவரின் சகோதரரான ந.செல்வராஜ் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில் தொடர்ந்து காணாமல் போனவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
(லியோன்)