இன்று நண்பகலுடன் வேட்புமனு ஏற்றல் நிறைவு
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்பு, இன்று திங்கட்கிழமை (13) நண்பகல் 12 மணியுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில், இதுவரையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யாதுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், இன்று நண்பகல் வரை காத்திராது, கூடிய விரைவில் வந்து தாக்கல் செய்யுமாறு தேர்தல்கள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள்இன்றைய தினத்திலேயே வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளன. இதனால், தேர்தல் திணைக்களம் அமைந்துள்ள பிரதேசத்தில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், நாரஹேன்பிட்ட மற்றும் எவ்விடிகல மாவத்தையில் நாளை காலை 7 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை போக்குவரத்து தடைப்படுமென பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது. பேஸ்லைன் வீதியின் நாரஹேன்பிட்டி சந்தி, பார்க் வீதியிலிருந்து எல்விட்டிகல மாவத்தை சமிக்ஞை விளக்கு சந்தி மற்றும் நாவல சந்தியிலிருந்து நாரஹேன்பிட்டி சந்திவரை போக்குவரத்து தடைப்படுமென போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் வசிப்போர், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளிகள், அப்பகுதிகளில் வேலைபார்ப்போர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் மட்டும் தடைவிதிக்கப்பட்ட நேரத்தில் குறித்த பகுதியால் செல்ல அனுமதிக்கப்படுவர் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



