Breaking News

சந்தேகநபர்களை தொடர்ந்து தடுத்து வைக்கும்படி பாதுகாப்பு அமைச்சு பணிப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 பேரையும் தடுத்து வைக்கும்படி பாதுகாப்பு அமைச்சு பணித்திருப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கிஹான் சந்தரூவான், உபாலி குணரத்ன, பந்துபால, ஸமில பிரசன்ன, ரசங்க குணசேகர, பிரான்ஸிஸ் மற்றும் பண்டார குலரத்ன ஆகிய 7 பேரும் குற்றப் புலனாய்வு துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை. மொஹமட் ஷபாஸ், விதான கமகே, அமில, சரித்த பிரியதர்ஷன மற்றும் சாமர  சம்பத் ஆகிய சந்தேக நபர்களை செப்டெம்பர் 7 வரை மேலும் விளக்கமறியலில் வைக்குபடி குற்றப் புலனாய்வு துறையினர், நீதவானிடம்  கோரியுள்ளர். இந்த சந்தேகநபர்களில் இருவர் நீதவான் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டதாகவும்  மேலும் இருவர் ஒப்புதல் வாக்கு மூலம்  அளிக்கப்படுவதாகவும் குற்றப் புலனாய்வு துறையினர் குறிப்பிட்டனர். சந்தேகநபரின் வசமிருந்து கைப்பற்றிய சான்றுப்பொருட்களை அரசாங்கம்  பகுபாய்வாரள்களுக்கு  அனுப்பியுள்ளதாக  குற்றப் புலனாய்வு துறையினர் மேலும் கூறினர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஜூலை மாதம் 31ஆம் திகதி கொழும்பு, கொட்டாஞ்சேனை, புளூமெண்டல் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போது, பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 12பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவில் ஆதரவாளர்கள் மீதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதுடன் கொட்டாஞ்சேனை பெனடிக் கல்லூரி மைதானத்துக்கு முன்னால் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த சுமார் 250 - 300பேர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த மைதானத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இலக்கத் தகடு அற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் ரக வாகனமொன்றில் வந்திறங்கிய நால்வரே, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தவர்களை குறுக்கிட்டு ரீ - 56 ரக துப்பாக்கியினால் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியிருந்தனர். இந்த துண்டுப் பிரசுர விநியோகத்தில் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டிருந்த போதிலும் அவர் மற்றொரு தரப்பினருடன் கொட்டாஞ்சேனை பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தார். ஏனையவர்கள், புளுமெண்டல் வீதியினூடாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டு ஆமர் வீதியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்போது அறிக்கையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.