யுவதியை தாக்கிய இளைஞன் மீது கடும் தாக்குதல்
யுவதியை தாக்கிய இளைஞன் மீது கடும் தாக்குதல்
யுவதியொருத்தியை இரண்டு இளைஞர்கள் தாக்கும் வீடியோவில் காட்சியளித்த இளைஞன் மீது கட்டுநாயக்கவில் வைத்து கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு இளைஞர்கள் சேர்ந்து ஒரு யுவதியைத் தாக்கும் வீடியோ காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்திருந்த பொலிஸார், காணொளியில் தோன்றும் இளைஞர்கள் இருவர் மற்றும் யுவதி குறித்த தகவல்களை வழங்குமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில், குறித்த வீடியோவில் தோன்றும் இரண்டு இளைஞர்களில் ஒருவனும், யுவதியும் தாங்கள் காதலர்கள் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் பொலிஸில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர். மேலும், குறித்த காணொளி, சுமார் ஒருவருடத்துக்கு முன்னர் இடம்பெற்றது என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை இடைநிறுத்தியிருந்தனர். இதற்கிடையே காணொளியில் தோன்றிய ருவன் குமார எனும் குறித்த இளைஞன் கட்டுநாயக்கவில் உள்ள தனது வேலைத்தளத்துக்குச் செல்லும் வழியில் இளைஞர்கள் குழுவொன்றினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதல் காரணமாக ருவன் குமாரவின் ஒரு கண் முழுமையாக வீக்கத்துக்குள்ளாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.



