Breaking News

மருத்துவ தேர்வில் மது அருந்தும் போட்டி வைத்த ஆசிரியர் !

சீனாவில் அதிகமாக மது குடிப்பவருக்குதான் பாஸ் மார்க் என்றுகூறி மாணவர்களை போதையில் ஆழ்த்திய மருத்துவ கல்லூரி ஆசிரியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் குய்ழோ மாகாணத்தில் சீன வைத்திய முறைகளை கற்றுத்தரும் பிரபலமான மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. பாரம்பரியமான மருந்து வகைகளை தயாரிக்கும் முறை தொடர்பான இறுதி தேர்வின்போது, இந்த கல்லூரியின் மாணவர்கள் அனைவருக்கும் இங்கு பணியாற்றும் ஆசிரியர் வினோதமான பரீட்சை ஒன்றை வைத்துள்ளார்.

ஒருகிளாஸ் மதுவை ஒரே மூச்சில் முழுங்கும் மொடாக்குடியனுக்கு 100 மதிப்பெண்கள், அரைகிளாஸை காலி செய்யும் அப்ரன்ட்டிஸ்களுக்கு 90 மதிப்பெண்கள், ஒருமிடறு குடித்துவிட்டு ஓங்கரித்தால் 60 மதிப்பெண்கள், முகர்ந்துப் பார்த்துவிட்டு ஓடிப்போகிறவர்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் என இவர் வைத்த பரீட்சையில் முழு மதிப்பெண்களைப் பெற போட்டிப் போட்டுக் கொண்டு குடித்த பல மாணவர்கள் வகுப்பறைக்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளனர்.

இதுதொடர்பான தகவல் வெளியானதும் அந்த ‘நல்லாசிரியரை’ தற்காலிக பணீநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் பரவ ஆரம்பித்ததும் அவரது செயலுக்கு நியாயம் கற்பித்து சிலரும், எதிர்ப்பு தெரிவித்து பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.