Breaking News

மசகு எண்ணை விலை கணீசமான அழவு வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய மசகு எண்ணையின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில் உற்பத்தியை குறைப்பது தொடர்பாக பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளனர்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு 30 டாலர்களுக்கும் கீழாக சரிந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக மசகு எண்ணை உற்பத்தியை குறைத்துக் கொள்ள எண்ணை வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்துள்ளன.

இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 15 முக்கிய நாடுகளின் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று அவசர ஆலோசனை நடத்தவுள்ளனர். இதற்காக, சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி அலி அல் நைமி, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளின் பெட்ரோலியத்துறை மந்திரிகள் தோஹா நகருக்கு வந்துள்ளனர்.

கத்தார் நாட்டின் எரிபொருள் மற்றும் தொழில்துறை மந்திரி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரான் கையொப்பமிடாது என தெரியவந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி நாளொன்றுக்கு 32 லட்சம் பேரல் மசகு எண்ணையை உற்பத்தி செய்துவரும் ஈரான் முதலில் சர்வதேச பொருளாதாரத்தடை முழுமையாக விலக்கப்பட்டு, தங்கள் நாட்டு மசகு எண்ணையை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.