Breaking News

கால்பந்து விளையாடியதால் 7 வயது சிறுவனுக்கு மரண தண்டனை !

சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தனிநாடு உருவாக்கினார்கள். அங்கு கடுமையான சட்டங்களை விதித்தனர். தங்களது மதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கொடூரமாக தண்டித்து வருகின்றனர். சமீபத்தில் சிரியாவில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா நகரில் கால்பந்து விளையாடிய 7 வயது சிறுவனை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர்.

அவனது பெயர் முயாஷ் ஹசன். கடந்த 2–ந்தேதி ரக்கா நகரில் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். எனவே மதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி ஐ.எஸ். தீவிரவாதிகள் அவனை கைது செய்தனர்.

பின்னர் ‘தரதர’வென ஷரியா கோர்ட்டுக்கு அவனை இழுத்து சென்றனர். அங்கு நீதிபதி முன்பு நிறுத்தினர். குற்றச்சாட்டுகளை விசாரித்த கோர்ட்டு சிறுவன் முயாஷ் ஹசனுக்கு மரண தண்டனை விதித்தது. அவனை பெற்றோர் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டது.

அதை தொடர்ந்து அவன் துப்பாக்கி சுடும் அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, கூடிநின்று வேடிக்கை பார்த்த பொது மக்கள் மத்தியில் ஈவு இறக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டான். முன்னதாக அலெப்போ நகரில் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைக்கு உளவு பார்த்ததாக 2 இளைஞர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர்.