Breaking News

இலங்கையுடனான 4-வது ஒருநாள் போட்டியில் ஜேசன்ராயின் சதத்தால் இங்கிலாந்து வெற்றி

லண்டன் ஓவல் மைதானத்தில் பகல்-இரவாக நடந்த இந்த ஆட்டத்தில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இலங்கை அணி 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன் குவித்தது. குஷால் மெண்டீஸ் 64 பந்தில் 77 ரன்னும் (14 பவுண்டரி), கேப்டன் மேத்யூஸ் 54 பந்தில் 67 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), சண்டிமால் 51 பந்தில் 63 ரன்னும் எடுத்தனர். டேவிட் வில்லி, ஆதில் ரஷீத் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

டக்வெரர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து அணிக்கு 42 ஓவர்களில் 308 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி 40.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 309 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் ஜேசன்ராய் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் இந்தப்போட்டித் தொடரில் அவருக்கு 2-வது செஞ்சூரியாகும். ஜேசன்ராய் 118 பந்தில் 162 ரன்னும் (13 பவுண்டரி, 3 சிக்சர்), ஜோ ரூட் 54 பந்தில் 65 ரன்னும் (9 பவுண்டரி) எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது ஆட்டம் மழையால் ரத்து ஆனது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி போட்டி வருகிற 22-ந்தேதி கார்டிப் நகரில் நடக்கிறது.