Breaking News

சிலியை வீழ்த்தியது அர்ஜென்டினா

45–வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘லீக்’ முடிவில் 4 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

‘டி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா–சிலி அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் அந்த அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. 2–வது பாதி ஆட்டத்தில் அந்த அணி வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்து குறிப்பாக டிமாரியா சிறப்பாக விளையாடினார். ஆட்டத்தின் 49–வது நிமிடத்திலும், 58–வது நிமிடத்திலும் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார்.

இறுதியில் சிலி அணி கடுமையாக போராடியது. ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லாமல் போனது. இறுதியில் அர்ஜென்டினா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பொலிவியா– பனாமா அணிகள் மோதின. இதில் பொலிவியா எதிர்பாராத வகையில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பனாமா 2–1 என்ற கோல் கணக்கில் பொலிவியாவை வீழ்த்தியது. பனாமா அணியில் பெரஸ் 2 கோலும் (11 மற்றும் 87–வது நிமிடம்), பொலிவியா அணியில் கார்லோஸ் ஆர்சேயும் (54–வது நிமிடம் கோல்) அடித்தனர்.

நாளை நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள கொலம்பியா–பராகுவே அணிகளும் அமெரிக்கா– கோஸ்டாரிகா அணிகளும் மோதுகின்றன.

கொலம்பியா தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வீழ்த்தி இருந்தது. இதனால் பராகுவேயை வீழ்த்தி 2–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பராகுவே தொடக்க ஆட்டத்தில் கோஸ்டாரி காவுடன் கோல் எதுவுமின்றி ‘டிரா’ செய்தது.

அமெரிக்கா, கோஸ் டாரிகா அணிகள் முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.