Breaking News

மாணவிகளின் பெரிதும் நன்மையளிக்கக்கூடிய வகையில் மட்டக்களப்பு நகர பெண்கள் விஷேட பஸ் சேவை ஆரம்பிப்பு - படங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா மற்றும் கல்லடி பிரதேசங்களிலிருந்து  மட்டக்களப்பு நகரத்திற்கு பிரத்தியோக வகுப்பிற்காக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செல்லுகின்ற பெண் மாணவிகளுக்கு பிரத்தியோகமாக (விஷேடமாக) ஒரு மகளிர் பேரூந்து சேவை ஒன்றினை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகார சபையுடன் தொடர்புகொண்டு அதனை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டதற்கு அமைவாக கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு காரியாலயம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதனை தொடர்ந்து நேற்று 21 ஞாயிறுக்கிழமை பி.ப. 02.30 மணியளவில் ஆரையம்பதி பேரூந்து நிலையத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியிலாளர் ஷிப்லி பாறூக் மேற்படி பெண்களுக்கான விஷேட பஸ் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதிப்பயணி போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலய போக்குவரத்து அதிகாரி ஏ.எம்.அன்வர், முக்கிய பிரமுகர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த மகளிர் பேரூந்து சேவையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக ஆரம்பிப்பட்ட ஓர் சேவையாகும்.

இச்சேவையானது முதற்கட்டமாக சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பி.ப 2.30 மணிக்கு ஆரையம்பதியிலிருந்து மட்டக்களப்பு நகருக்கும் மீண்டும் 6.00 மணிக்கு மட்டக்களப்பு நகரிலிருந்து ஆரையம்பதிக்கும் இவ் விஷேட மகளிர் பேரூந்து சேவை நடைபெறும்.

இச் சேவையினூடாக பிரத்தியோக வகுப்புகளுக்கு செல்லும் பெண் மாணவிகள் அச்சமின்றி பாதுகாப்பாக தமது கல்வி சேவையினை முன்னெடுத்து செல்வார்கள். அத்துடன் அலுவலகங்களில் கடமைபுரிகின்ற பெண்களுக்கும் அதேபோன்று தமது அன்றாட தேவைகளுக்காக பிரயாணம் செய்யும் பெண்கள் அனைவரும் இச்சேவையின் மூலம் பயன் பெற முடியும்.

இந் நிலையில் இச் சேவையானது பயணிகளது பூரண ஒத்துழைப்புக்கள் கிடைக்குமிடத்து இதனை நாளாந்த சேவையாக காலையிலும் மாலையிலும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் இந் நிகழ்வின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)