Breaking News

உங்கள் குழந்தையும் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையா ??!

விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு!

திருடனை பிடிப்பது–மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது–மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.

அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தவறு!. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும். 

மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள். ‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.

உங்கள் குழந்தைகள் தினமும் 1–2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள். உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். 

படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள்.