Breaking News

வீதிப்போக்குவரத்துக்கு இடைஞ்சலாக பாதையின் மத்தியில் போடப்பட்ட மின்கம்பங்கள் தொடர்பில் வழக்கு !!

ஏறாவூர் ரகுமானியா மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலுள்ள பெண்சந்தை வீதி நான்காம் குறுக்கு வீதியின்  மத்தியில் நிறுவப்பட்டிருக்கும் மின்சாரக்கம்பத்தினால் பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள்.

இதனை அகற்றி வீதியோரமாக நடுவதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் இதுவரை பலனளிக்கவில்லை. இந்த மின்சாரக் கம்பத்தினை பாதையின் மத்தியிலிருந்து அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்குமாறு  கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்அஹமதிடம் மக்கள் விடுத்த கோரிக்கையை கவனத்திலெடுத்த முதலமைச்சர் மின்சார சபையின் உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு வீதியின் மத்தியில் இருக்கும் மின்கம்பத்தினை உடனடியாக அகற்றுமாறு பணித்துள்ளார். 

அதுமட்டுமல்லாது இதுபோன்று பாதையின் நடுவில் நிறுவப்பட்டிருக்கும் ஏனைய சகல மின்கம்பங்களையும் அகற்றுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களும் அதில் கவனம் எடுத்து மின்சார சபைகளின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும் சகல மின்கம்பங்களையும் அகற்றி பாதை ஓரங்களில் நட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நடவடிக்கைகள் இடம்பெறாதவிடத்து மின்சார சபைக்கு எதிராக உடனடியாக வழக்குத் தொடருமாறும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுக்கு முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பாக இன்று முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மின்சார அமைச்சருக்கும் மாவட்ட பொறியியலாளர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் கடிதம் மூலம் தகவல் அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.