Breaking News

விஷேட தேவையுடையோருக்கான-2016 அரச கலை விழா முன்னிட்டு நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட போட்டித் தொடரில் வெற்றி பெற்றவர்களை பாராட்டும் நிகழ்வு-படங்கள்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும், கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் விஷேட தேவையுடையோருக்கான 2016 அரச கலை விழா முன்னிட்டு நடாத்தப்பட்ட மாவட்ட மட்டபோட்டித் தொடரில் வெற்றி பெற்றவர்களை பாராட்டும் நிகழ்வு 01-09-2016 இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி விஷேட தேவையுடையோருக்கான பாராட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் (ஓய்வுநிலை) விரிவுரையாளர் ஈ.என்.உவோட்ஸ் வேத் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் 2016 அரச கலை விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட போட்டித் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்,முஸ்லிம்,கிறிஸ்தவ விஷேட தேவையுடையோர் பரிசும்,சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு விஷேட தேவையுடைய மாணவர்களின் ஆற்றல்களையும்,திறமைகளையும் வெளிக்கொணரும் வகையில் மட்டக்களப்பு தரிசனம் மாணவர்களின் குழு நாட்டார் பாடல்,மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மாணவர்களின் புத்தாக்க குழு நடனம்,குறு நாடகம் ,ஏறாவூர் ஐயங்கேனி ஹிஸ்புல்லாஹ் வித்தியாலய மாணவர்களின் புத்தாக்க நடனம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

விஷேட தேவையுடையோர்களின் வரலாற்று சிறப்பு மிக்க இந்நிகழ்வில் சீ.ஏ.எம்.ஐ.டி.யின் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர்கே.காண்டீபன்,ஹேண்டிகெப்இன்டஷெனலின் திட்ட முகாமையாளர் கிரிஷ்டி சந்திரகாந்த, ஏறாவூர்,ஒட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர்களான ஹனீபா,நௌபல்,நிஹாரா மௌஜூத் வீ.வாசுதேவன்,மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் எம்.ஏ.சீ.ஜெய்னுலாப்தீன் உட்பட அதன் அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள்,விஷேட தேவையுடைய பாடசாலைகளின் ஆசிரியர்கள்,விஷேட தேவையுடைய மாணவர்கள், மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)