Breaking News

மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா வித்தியாலத்தில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு-படங்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச கல்விக் கோட்டத்தின் கீழ் இயங்கிவரும் மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா வித்தியாலத்தில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று 15-11-2016 இன்று செவ்வாய்க்கிழமை மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யா தஃவா பிரிவின் ஏற்பாட்டில்ஹூஸைனியா வித்தியாலய அதிபர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.பாயிஸ் (இஸ்லாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி கல்வி வழிகாட்டல் கருத்தரங்கில் 'கல்வியால் உயர்வு' எனும் தலைப்பில் லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யாவின் உப தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.பஷீர் (மதனி),பின்தங்கிய பாடசாலையொன்றின் கல்வி வளர்ச்சிக்கு பெற்றோர் எவ்வாறு உறுதுணையாக பங்களிப்பு செய்வது எப்படி எனும் தலைப்பில் ஒய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.ஏ.இஸ்மாயில்,விடா முயற்சியும் தன்னம்பிக்கையுமே சிறந்த கல்விக்கான களம் எனும் தலைப்பில் லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) ஆகியோர் சிறப்பான முறையில் தங்களது தலைப்புக்களில் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இங்கு  கல்வி அறிவை ஊக்குவிக்கும் முகமாக மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

முழுமையாக குறித்த பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி இடம்பெற்ற  மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கில் லஜ்னதுஸ்ஸூன்னா அந்நபவிய்யாவின் உப செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.ஜிப்ரி (மதனி),மஞ்சந்தொடுவாய் ஹூஸைனியா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கே.எம்.பஸ்லி அதன் செயலாளர் எம்.எச்.கச்சி முஹம்மது உட்பட பாடசாலை மாணவ,மாணவிகள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1980 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட  ஹூஸைனியா வித்தியாலயத்தில் 1 தொடக்கம் 5 வரையுள்ள தரங்களில் 35 மாணவ,மாணவிகள் கல்வி கற்று வருகின்ற இப் பாடசாலையானது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும்,பௌதீக வலங்கள் அற்ற நிலையிலும் காணப்பட்டு வருகின்றது. மேற்குறிப்பிட்ட விடயங்களை நிவர்த்தி செய்வது சமூகத்தினதும்,சம்மந்தப்பட்ட அதிகாரிகளினதும்,அரசியல்வாதிளினதும் கடமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)