Breaking News

திருமலை மாணவர்களின் கல்வி உதவிகள் !!

இனங்களுக்கிடையில் அடிப்படை புரிந்துணர்வு, ஒருவருக்கொருவர் நேசக்கரம் நீட்டல், நல்லுறவு, சகவாழ்வு என்பனவற்றை நிலைநிறுத்த அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வரும் இந்த காலகட்டத்தில் தனிநபர்களும் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புக்களும் இதில் தங்களால் முடிந்த பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு முன்னோடியாக கொழும்பை தளமாகக் கொண்டு செயற்படும் A.T பவுண்டேஷன் கடந்த சுமார் ஒரு தசாப்த காலமாக கல்வித் துறையில் பெரும் பங்காற்றி வருகின்றது.

இவ்வாண்டு அதன் சமூக நல்லுறவு உதவித் திட்டத்தின் கீழ் திருகோணமலை தம்பலகாமம் மற்றும் கிண்ணியா கல்வி வலயங்களின் கீழ் வரும் ஆறு பாடசாலைகளைச் சேர்ந்த 150 மாணவ மாணவிகளுக்கு கல்வியை தொடங்கவும் தொடரவும் தேவையான அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பாதணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் என்பனவற்றை வழங்க முன்வந்துள்ளது. பாடசாலை அதிபர்களின் சிபார்சோடு ஆண்டு ஒன்று முதல் உயர் தரம் வரை உதவித் தேவைப்படும் மாணவர்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொன்றும சுமார் 2இ500 ரூபா பெறுமதியான நன்கொடைப் பொதிகள் உட்பட 1000 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களும் வழங்கப்படும்.

தம்பலகாமம் கல்வி வலயத்தின் கீழ் வரும் ஆதி கோணேஷ்வரா மகா வித்தியாலயம், குளக்கோட்டன் தமிழ் வித்தியாலயம், சாரதா வித்தியாலயம், சிவசக்தி வித்தியாலயம் மற்றும் கிண்ணியா கல்வி வலயத்தின் கீழ் வரும் மீரா நகர் முஸ்லிம் வித்தியாலயம், அல்ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலயம் என்பனவற்றை சேர்ந்த மாணவர்கள் இந்த உதவிகளைப் பெறவுள்ளனர்.

தம்பலகாமம் ஆதிகோணேஷ்வரா வித்தியாலய கேட்போர் கூடத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.00 முதல்12.00 மணிவரை இந்த வைபவம் இடம்பெறும். A.T பவுண்டேஷன் தலைவர் மௌலவி அல்ஹாபிழ் மஃசூக் அப்துல் றஹ்மான் (அல் ஹுஸைனி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்த வைபவத்தில் வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளர் முருகேசு குலேந்திரன் பிரதம அதியாகவும், வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் செய்தி வாசிப்பாளரும், தயாரிப்பாளருமான ஏ.எல். இர்பான் கௌரவ அதிதியாகவும், சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.நௌஷாட் மொஹிடீன் விஷேட அதிதியாகவும் கலந்து கொள்வர். சமயத் தலைவர்கள் பலர் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளளனர்.