பாகிஸ்தானில் இந்துக்கள் கோவில் கட்ட நிலம் ஒதுக்கீடு!
முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் இந்துக்கள் மைனாரிட்டிகளாக உள்ளனர். எனவே அங்கு இந்து கோவில்கள் அதிக அளவில் இல்லை. சில கோவில்கள் தீவிரவாதிகளால் இடித்தும், சேதப்படுத்தப்பட்டும் வருகிறது.
தலைநகர் இஸ்லாமா பாத்தில் 800 இந்துக்கள் வாழ்கின்றனர். அங்கு ஒரு பெரிய கிருஷ்ணர் கோவில் மட்டுமே உள்ளது. சமுதாய கூடம் மற்றும் சுடுகாடு போன்ற தனிப்பட்ட அடிப்படை வசதிகளும் கிடையாது. இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய ராவல்பிண்டி அல்லது அவர்கள் வாழும் நகரங்களுக்குதான் கொண்டு செல்ல வேண்டும்.
எனவே புதிதாக கோவில் கட்டவும், சுடுகாடு மற்றும் சமுதாய கூடம் கட்ட நிலம் ஒதுக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் இந்துக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அக்கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் வளர்ச்சி குழுமம் பொதுமக்களின் அடிப்படை வசதியை மேம்படுத்தும் வகையில் இந்துக்களின் கோரிக்கையை ஏற்று கோவில் கட்டவும், சுடுகாடு அமைக்கவும் நிலம் ஒதுக்கியுள்ளது. இதற்காக ½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.