Breaking News

காணாமல் போனவர்களைக் கண்டறிய விசேட திட்டம் அவசியம் !

கடந்த காலங்களில் காணால் போனவர்களைக் கண்டறிய அரசு விசேட திட்டமொன்றை வகுக்க வேண்டும் என்பதுடன், காணாமல்போனவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 
யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் - காணாமல்போயுள்ளனர். இவர்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளோ – தீர்மாங்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. 

அந்தக் குடும்பங்கள் தமது உறவுகள் இன்று வருவார்கள் - நாளை வருவார்கள் என்ற நம்பிக்கையுடனே வாழ்ந்து வருகின்றனர். காணாமல்போன பிள்ளையை நினைத்து தாயும், கணவனை நினைத்து மனைவியும், தந்தையை நினைத்து பிள்ளைகளும் ஏங்கிக் கதறும் நிலையை வடக்கு, கிழக்கில் தினமும் காணமுடியும். எனவே, இந்த விடயத்தில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

காணாமல்போனோர் பிரச்சினை வடக்கு, கிழக்கில் மட்டுமின்றி முழு நாட்டிலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாடின்றியுள்ளது. விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இது பெரும் பிரச்சினையாக உள்ளது. 

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை முன்னாள் அதிபர் யூ.எல்.தாவூத் சேர், ஓட்டமாவடி தவிசாளர் புகாரி விதானே போன்ற சமூகத்தின் முக்கியமானவர்கள் பலர் கடத்தப்பட்டனர். அதுமட்டுமன்றி ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு காத்தான்குடி திரும்பிக் கொண்டிருந்த 150 மேற்பட்ட முஸ்லிம் யாத்திரிகர்கள் குருக்கள்மடம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டனர். அவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது என எந்தத் தகவலும் இல்லை. 
இவ்வாறு யுத்த காலப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள் - காணாமல்போயுள்ளனர்.

 இவர்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளோ – தீர்மாங்களோ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை. எனவே, இது தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – என்றார்.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)