Breaking News

புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகளின் பயத்தை போக்குவது எப்படி?

முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவருமே மிக மகிழ்ச்சியாக வகுப்புகளுக்கு செல்வதில்லை. பல குழந்தைகள் ஒரு சில நாட்களுக்கு பள்ளி செல்லும் போது பயம் கொண்டர்வர்களாகவே செல்கிறார்கள். குறிப்பாக சில குழந்தைகள் ஆசிரியர்களைப் பார்த்து பயம் கொண்டு, அதனால் பள்ளிக்கு செல்ல பயம் கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும்போது சாப்பாடு ஊட்டும் போது அல்லது தங்களுக்கு குழந்தைகளை பணிய வைக்க வேண்டும் என்று நினைக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ள யாரையாவது காட்டியோ, அல்லது குறிப்பிட்டு சொல்லியே பயமுறுத்தி வளர்ப்பது, குழந்தைகளை பிறரோடு சேர்ந்து வெளியிடங்களில் விளையாட அனுமதிக்காமல் வளர்ப்பது, பூச்சாண்டி வருகிறார் என்று கூறி வித்தியாசமாக பிம்பம் ஒன்றை குழந்தைகள் மனதில் வளர்ப்பது ஆகியவை குழந்தைகளின் ஆசிரியர் பற்றிய பயத்திற்கு அடிப்படை காரணங்களாகும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் ஆசிரியர் சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் அடித்து விடுவார் என்று எச்சரிக்கையாக கூறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். இவ்வாறு கூறுவது ஆசிரியரை சந்திக்கும் முன்பே அவரைப் பற்றிய பய உணர்வை ஏற்படுத்த வழி வகுக்கும். சில ஆசிரியர்கள் முதல் நாள் பள்ளி திறந்த உடனேயே கையில் குச்சியும் முகத்தில் கடுகடுப்புமாக குழந்தைகள் முன் பூதம் போன்று தோன்றுவர். இத்தகைய ஆசிரியர்கள் இறுகிய மனம் கொண்ட குழந்தைகளின் மனதில் பள்ளியிறுதி காலம் வரைக்குமான பயத்தை உண்டாக்கி விடுவார்கள்.