Breaking News

படையினர் வசமுள்ள பல காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கிழக்கு முதலமைச்சருடனான சந்திப்பில் கலந்துரையாடல்

வடக்கு மற்றும் கிழக்கில்  படையினர் வசமுள்ள காணிகள் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் இதுவரை விடுவிக்கப்படாமை தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது,

படையினரின் ஆதிக்கத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதன் ஊடாக சிறுபான்மையினரின் நம்பிக்கையை வெற்றிக் கொள்வதற்கு ஏதுவான காரணியாக அமையும் என்பதும் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் (james dauris) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம் நசீர் ,ஆரியவதி கலப்பதி மற்றும்   முதலமைச்சரின் செயலாளர் யூ.ஏ.எல் அஸீஸ் உட்பட பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்,

அத்துடன் இதன் போது  தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக சிறுபான்மையினருக்கான நிரந்தரமாக பாதுகாப்பான தீர்வொன்றை  பெறுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது

இதன் போது கிழக்கு மாகாண கல்வித் துறையை மேம்படுத்துவதற்கான உதவி நிகழ்ச்சித் திட்டமொன்றை உருவாக்க வேண்டும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன் போது பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்,

இதனூடாக இன்று பௌதீக வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் கிழக்கு மாகாணத்தின் பின் தங்கிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் கட்டடங்கள் நிர்மாணம் மற்றும் தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்தல் போன்றவற்றிற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் குறைக்கப்பட்டுள்ளதால் மாகாண சபைகளின் கீழுள்ள   பாடசாலைககளை அபிவிருத்து  செய்வதில் பாரிய சிக்கல் நிலை தோன்றியுள்ளதால் இவ்வாறான உதவி நிகழ்த்திட்டங்கள் ஊடாக அவற்றை அபிவிருத்தி செய்வதறகான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன,

இதேவேளை கிழக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியாவின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதுடன் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில்  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தமது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்