சவுதி தலைநகர் ரியாத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்- தீவிரவாதி பலி, 2 போலீசார் படுகாயம்
சவுதி தலைநகர் ரியாத்தில் நடந்த கார்வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு போலீசார் படுகாயமடைந்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டி வந்த தீவிரவாதி உயிரிழந்தார். சவுதி தலைநகர் ரியாத்தில் அல்-ஹேர் சாலையில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு தான். அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் காரை ஓட்டி வந்த தீவிரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீசார் படுகாயம் அடைந்தனர். இது ஐஎஸ் தீவிரவாதிகளின் கார் வெடிகுண்டுத் தாக்குதலா என விசாரணை நடத்தி வருவதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டிருந்ததால், இந்தத் தாக்குதலை அவர்கள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. ரமலான் நோன்பின் கடைசி நாளான இன்று இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதால், சவுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



