இருதய நோய்க்கும், கொழுப்புக்கும் சம்பந்தம் இல்லை ஆய்வில் அதிர்ச்சி தகவல்
'இருதய நோய்க்கும், கொழுப்புக்கும் சம்பந்தம் இல்லை’ என ஆய்வில் அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.
இருதய நோய்கள் ஏற்படுவதன் மூல காரணமே உடல் அளவுக்கு அதிகமாக உருவாகும் கொழுப்புதான் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. எனவே, கொழுப்பை குறைக்க இறைச்சி சாப்பிடுவதிலும், சமையல் எண்ணெய்யை பயன்படுத்துவதிலும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.
டாக்டர்களும் கொழுப்பு சத்து குறைந்த உணவுவகைகளை சாப்பிடும்படி வலியுறுத்துகின்றனர். மேலும் உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பை குறைக்க மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால் இருதய நோய்களுக்கும், கொழுப்புக்கும் சம்பந்தம் இல்லை. கொழுப்பை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தேவையில்லை. பணமும், நேரமும் தான் வீணாக செலவாகிறது என்று சமீபத்தில் புதிய ஆய்வு அதிரடி தகவல்களை தெரிவித்துள்ளது.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு அது தொடர்பாக சமீபத்தில் 19 ஆய்வுகள் நடத்தினர். 68 ஆயிரம் பேர் இதற்கு பயன்படுத்தப் பட்டனர். அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கெட்ட கொழுப்பு எனப்படும் எல்.டி.எல். கொழுப்பால் இருதய நோய் பாதிப்பு ஏற்படவில்லை.
அவர்களில் 92 சதவீதம் பேர் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். மீதமுள்ள 8 சதவீதம் பேருக்கும் எந்த நோய் பாதிப்பும் ஏற்படவில்லை. கொழுப்பில் இருக்கும் ‘ஸ்டேடின்ஸ்’ எனப்படும் வேதிப்பொருள் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தடுப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் உடலில் அதிக அளவு கொழுப்பு சத்து இருப்பவர்கள் புற்று நோய் தாக்காமல் காப்பாற்றப்படுவதாகவும் ஒரு இனிய தகவலை வெளியிட்டுள்ளனர். 1 லட்சத்து 40 ஆயிரம் பேரிடம் இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் கொழுப்பு சத்து அதிகம் இருப்பவர்களில் 10 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு புற்று நோய் தாக்குதல் குறைவாக இருந்தது. அதே நேரம் கொழுப்பை குறைக்க அதிக அளவு மருந்து, மாத்திரை சாப்பிடுபவர்கள் புற்று நோய் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதும் கண்டறியப்பட்டது.