Breaking News

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் காலமானார்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் ரைஸ் (வயது 66) கேப்டவுனில் உடல்நலக் குறைவால் காலமானார். அவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூருக்கு சிகிச்சை வருகை தந்திருந்தார். 1969-1994 வரையிலான அவரது கிரிக்கெட் வாழ்வில் முதல் தர கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவிலும் இங்கிலாந்து கவுண்டி அணியான நாட்டிங்கம் ஷயரிலும் ஆடியுள்ளார். 482 போட்டிகளில் 26,331 ரன்களை 40.95 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 930 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். லிஸ்ட் ஏ என்று அழைக்கப்படும் ஒருநாள் கவுண்டி போட்டிகளில் 479 ஆட்டங்களில் விளையாடி 13,474 ரன்களையும் 517 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 1969-இல் இவர் தென் ஆப்பிரிக்க முதல் தர அறிமுக போட்டியில் ஆடினார். அதாவது தென்னாப்பிரிக்கா அணி தனிமைப்படுத்தப்படுவதற்கு சற்று முன்பு இவர் அறிமுக முதல் தர போட்டியில் ஆடினார். இதனையடுத்து 1975-ம் ஆண்டு அவர் இங்கிலாந்து கவுண்டி அணியான நாட்டிங்கம் ஷயருக்கு வந்தார். அந்த அணியை 1979-1987 வரை தலைமைப்பொறுப்பில் வழி நடத்தினார். 1981 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் இவரது தலைமையில் நாட்டிங்கம் ஷயர் கவுண்டி சாம்பியன் பட்டம் வென்றது. அவர் சிறிது காலமாக மூளைக்கட்டி நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கேப்டவுன் மருத்துவமனையில் செவ்வாயன்று அவரது உயிர் பிரிந்தது. மிகச் சிறந்த ஆல்ரவுண்டரான கிளைவ் ரைஸ் கடந்த மார்ச் மாதம் புற்று நோய் தொடர்பான சிகிச்சைக்காக பெங்களூரு வந்திருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.