குழந்தை பருவத்தில் தொடங்கிய காதல்: 75 வருட மண வாழ்க்கைக்கு பின் கையோடு கைகோர்த்து மரணத்தை தழுவிய தம்பதி
அமெரிக்காவில் உள்ள சாண்டியாகோ நகரை சேர்ந்த ஜேனட் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் குழந்தை பருவத்தில் காதலிக்க ஆரம்பித்து, மண வாழ்க்கையையும் 75 வருடம் சந்தோஷமாக கழித்து மரணத்தையும் ஒன்றாக கையோடு கை சேர்த்து தழுவியுள்ளனர்.
அந்நாட்டில் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள ஸ்டாம்போர்டு நகரில் கடந்த 1919 ஆம் ஆண்டு ஜேனட்டும், அலெக்சும் பிறந்தனர். தங்களது 8 வயது முதல் இருவரும் ஒருவரையொருவர் விரும்ப ஆரம்பித்தனர். நீண்ட நாள் காதல் வாழ்க்கைக்கு பின் கடந்த 1940 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வை இனிதே தொடங்கினர். இருவருக்கும் ரிச்சர்ட் மற்றும் ஏமி என இரு குழந்தைகள் பிறந்தன.
பின்னர் கடந்த 1970 ஆம் ஆண்டு, ஸ்டாம்போர்டு நகரில் இருந்து சாண்டியாகோ நகருக்கு இடம் பெயர்ந்தனர். அதன் பின் மரணத்தை தழுவும் வரை இருவரும் ஒருவரையொருவர் பிரிவதில்லை என்று முடிவெடுத்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் தங்களது திருமணத்தின் வெள்ளி விழா நாளை தம்பதியர் இருவரும் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதன் பின்னர் அடுத்த சில நாட்களில் 95 வயது அலெக்சாண்டரின் உடல்நிலை மோசமடைந்தது.
அப்போது தனது காதல் மனைவி ஜேனட்டிடம், உனது கைகளில் நான் மரணத்தை தழுவ விரும்புகிறேன் என்றார். அதே சமயம் தனது மகனை அழைத்த ஜேனட், நாங்கள் இருவரும் எங்களது படுக்கையில் கைகளை கோர்த்தவாறு மரணத்தை தழுவ விரும்புகிறோம் என்றார். அவர்கள் எண்ணப்படியே கடந்த ஜூன் 17-ந் தேதி தங்களது படுக்கையறையில் ஜேனட்டின் கைகளை பிடித்துக்கொண்டே அலெக்சாண்டர் மரணத்தை தழுவினார்.
அவர் மரணமடைந்துவிட்டார் என மகள் ஏமி கூறியதும், தனது கணவரை கட்டியணைத்த ஜேனட், இதை தானே நீங்கள் விரும்பினீர்கள் அலெக்ஸ். எனது கைகளில் தான் நீங்கள் மரணத்தை தழுவினீர்கள். ஐ லவ் யூ... ஐ.லவ்.யூ... எனக்காக காத்திருங்கள். சிறிது நேரத்தில் நானும் அங்கு வந்துவிடுகிறேன் என்று கூறினார்.
அதன்படியே அடுத்த சில நிமிடங்களில் ஜேனட்டும் இயற்கையாகவே மரணத்தை தழுவினார். அப்போது இருவரின் கரங்களும் ஒன்றோடு ஒன்று சேர்ந்திருந்தன. இப்படி ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்த தம்பதியரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அனைவரும், அவர்களின் ஒற்றுமையான வாழ்க்கையை புகழ்ந்தவாறு ஆனந்த கண்ணீர் சிந்தினர். கடல் கடந்து வந்திருக்கும் இச்செய்தி நமது மண்ணில் வாழும் மக்களுக்கும் வாழ்க்கையின் மகத்துவத்தை புரியவைக்கும் என்று நம்புகிறோம்...



