Breaking News

அமெரிக்காவிடம் ‘பிபா’ நிர்வாகி

கால்பந்து ஊழலில் கைது செய்யப்பட்ட ‘பிபா’ நிர்வாகி ஒருவர், அமெரிக்க போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். கடந்த 1990ல் அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் சர்வதேச கால்பந்து தொடர்கள் நடந்த போது, ‘டிவி’ ஒளிபரப்பு உரிமம் வழங்கியதில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’)  நிர்வாகிகள் ரூ. 984 கோடி வரை ஊழல் செய்தனர். இந்த வழக்கு அமெரிக்காவில் நடக்கிறது. தவிர, வரும் 2018ல் ரஷ்யா, 2022ல் கத்தாருக்கு உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்த அனுமதி தந்ததிலும் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்குகள் தொடர்பாக ‘பிபா’ நிர்வாகிகள் 7 பேரை சுவிட்சர்லாந்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் விசாரணைக்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவர் என்று கூறப்பட்டது. இதனிடையே, இந்த 7 பேரில் ஒருவரை சுவிட்சர்லாந்து போலீசார் கடந்த 14ம் தேதி அமெரிக்க புலனாய்வுத் துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தற்போது நியூயார்க் கொண்டு செல்லப்பட்ட இந்த நிர்வாகியின் பெயர் வெளியிடப்படவில்லை.  இருப்பினும், நாடு கடத்தப்பட்ட நபர் கய்மேன் தீவுகளைச் சேர்ந்த ஜெப்ரி வெப், 50, என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவர் தான் மத்திய, வடக்கு அமெரிக்க நாடுகள் கால்பந்து கூட்டமைப்பு தலைவராக இருந்தனர். இவரது காலத்தில் தான் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. அமெரிக்க சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்ட நபர், எவ்வித கால தாமதமும் இன்றி நீதிபதி முன்பு நிறுத்தப்பட வேண்டும். இதனால், ஜெப்ரி வெப் விரைவில் கோர்ட் கொண்டு செல்லப்படுவார் என்று தெரிகிறது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்