கொழும்பில் போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவில்லை
எதிர்வரும் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் முடிவு எதனையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடப் போகிறதா? இல்லையா? எனும் முடிவு எடுக்கப்படவில்லை. கொழும்பு மாவட்டத்தில் வாழும் வட- கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவாறு கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழரசுக் கட்சியின் பல செயற்குழுக் கூட்டங்களின்போது ஆராயப்பட்டன. பிரதிநிதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய அளவுக்கும் மேலதிகமாகவே கொழும்பில் வட-கிழக்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதைவிடவும், அந்த வாக்குகள் தேசியப்பட்டியல் மூலமாக மேலும் ஒரு பிரதிநிதியையும் நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பைக்கூட ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுவும் இந்த அழுத்தம் மேலோங்கக் காரணமாகும். நேச சக்தியாக மனோ கணேசனையும் சேர்த்துக் களம் இறங்குவதற்கான யோசனையும் சாதகமாகப் பரிசீலிக்கப்பட்டது. இந்த நிலைமை இன்றுவரை நீடிக்கின்றபோதும் மனோ கணேசன் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் களமிறங்குகிறார் என உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், தமிழரசுக் கட்சியும் அது சார்ந்துள்ள த.தே.கூ.வும் கொழும்பு மாவட்டத் தேர்தல் தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள், யாருக்கு எமது மக்கள் ஆதரவை வழங்கவேண்டும். தமிழர் வாக்குப்பலம் சிதறுண்டுபடாதவாறு ஒட்டுமொத்தத் தமிழருக்கும் நன்மை பயக்கக்கூடியவாறு அது எவ்வாறு பிரயோகிக்கப்படலாம் போன்ற விடயங்கள் பற்றி மக்களுக்கு விரைவில் தெளிவுபடுத்துவோம். முடிவுகள் எதுவாகவிருப்பினும் அவை நிச்சயம் எமது மக்களது எதிர்கால நலன்களை முன்னிறுத்தி எடுக்கப்படுவனவாகவே அமையும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்' என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



