Breaking News

ஜம்இய்யாவின் பெயரை தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் - காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

ஜம்இய்யாவின் பெயரை தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொதுத் தேர்தல் தொடர்பாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா வழங்கும் இஸ்லாமிய வழிகாட்டல் என்ற தலைப்பில் அதன் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி) மற்றும் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.ஜீ.எம்.ஜெலீல் (மதனி) ஆகியோரின் கையொப்பத்துடன் 03.08.2015 திகதியிட்டு வெளிடப்பட்ட அறிக்கையிலேயே இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

ஆந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம் சகோதரர்களாகிய நாம் தற்போது மற்றுமொரு தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரைக்கும் அவனுக்கு இவ்வுலக வாழ்வை விட மரணத்திற்குப் பின்னரான மறுவுலக வாழ்வுதான் அவனின் இலக்காக இலட்சியமாக இருக்க வேண்டும். இவ்வுலகம் மறுமைக்குத் தயாhராகும் பரீட்சை மண்டபமாகும். எனவே இவ்வுலக வாழ்வில் இஸ்லாமிய வழிகாட்டல்களைப் புறக்கணித்து தன்னிச்சையாக வாழ முற்படுபவன் நிச்சயமாக தனது மறுமை வாழ்வைப் பாழ்படுத்திக் கொண்டவனாவான். இவ்வுலகில் ஒருவர்புரியும் அனைத்து செயல்களும் பதிவு செய்யப்பட்டு மறுமையில் அது பற்றி அவரிடம் விசாரிக்கப்படும். எவர் அணுவளவு நன்மை செய்திருப்பினும் தீமை செய்திருப்பினும் அதற்குரிய கூலியை அல்லது தண்டனையை அவர் அனுபவித்தே தீர வேண்டும். இது இறைவாக்காகும். 

மரணம் மனிதனை பல கோணங்களில் துரத்தும் காலமிது. யாரை எங்கு எப்போது எந்நிலையில் அது பிடித்துக்கொள்ளுமென்று சொல்ல முடியாது. மரணவேளை நம் இறுதி முடிவு நல்லபடியாக அமையாவிடில் நமது மறுமை வாழ்வு நிச்சயம் நாசமாகிவிடும். எனவே ஒரு முஸ்லிம் எந்நேரமும் மரணத்தை நல்ல நிலையில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும். 

தேர்தல் எம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நூம் முஸ்லிம்கள் என்ற வகையில் தேர்தலும் அரசியலும் எமக்கு அவசியமாக இருப்பினும் இஸ்லாமும் அதன் வழிகாட்டல்களும் அதைவிட அவசியம். தீன் தான் எமது உயி; மூச்சு, அதற்காக எதையும் இழக்கலாம், ஆனால் எதற்காகவும் தீனை இழக்க, விட்டுக்கொடுக்க முடியாது. இஸலாம் சகல துறைகளுக்கும் வழிகாட்டல் வழங்கியுள்ள ஒரு சம்பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அரசியல், பொது ஒழுங்கு தொடர்பில் இஸலாம் வழங்கியுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றுவதன் மூலமே இம்மை, மறுமைக்கான எமது வெற்றி தங்கியுள்ளது என்பதை விளங்கி செயற்பட வேண்டும். 

ஒரு முஸ்லிம் சகோதரனின் உயிர், உடமை, மானம், மரியாதை விடயத்தில் தலையிடுவது மற்ற முஸ்லிமுக்கு ஹராம் என்று போதிக்கிறது இஸ்லாம். ஆனால் இன்றைய நடைமுறை அரசியலில் மேடைகளில் எதிரணி வேட்பாளர்களைத் தாறுமாறாக ஏசுதல், பொய் சொல்லல், புறம் பேசல், மானபங்கப்படுத்தல், அவரின் தனிப்பட்ட குடும்ப இரகசியங்களை வெளிப்படுத்தல், கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தல், வாந்திகளைப் பரப்புதல், உண்மைக்குப் புறம்பாக செய்திகளைத் திரித்து பிரச்சாரம் செய்தல், சுவரொட்டிளை அனுமதியின்றி ஒட்டுதல், எதிரணியின் சுவரொட்டிகளை அசிங்கப்படுத்துதல் போன்றன சாதாரணமாகிப் போய்விட்டன. ஆனால் இவை இஸ்லாத்தில் தண்டனைக்குரிய பெரும்பாவங்களாகும். 

இதேபோன்று குறித்த கட்சியொன்றின் ஆதரவாளர்கள் மற்றக் கட்சிகளின் ஆதரவாளர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடல், தனியார், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தல், தனது அணிக்கு வாக்களிக்குமாறு வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ மிரட்டுதல், அச்சுறுத்தல், இலஞ்சம் கொடுத்தல், கையூட்டுப் பெற்றுக்கொண்டு வாக்களித்தல், தனிப்பட்ட வகையில் தனக்கு வாக்களிக்காதோரைப் பழிவாங்குதல், கள்ளவோட்டுப் போடுதல், அதற்கு உடந்தையாக இருத்தல், வெற்றி பெறுவதற்காக முறைகேடான வழிமுறைகளைக் கையாளல் போன்றனவும் இஸ்லாம் தடுத்த பெரும் பாவங்கள் மாத்திரமன்றி ஜனநாயகத்தையும் அப்பட்டமாக மீறும் மனச்சாட்சிக்கு விரோதமான செயல்களாகும். 

நபியவர்களிடம் ஒரு நபித் தோழர் தன்னை அதிகாரியாக நியமிக்குமாறு கேட்டபோது 'ஆட்சி அதிகாரம் ஒரு அமானிதமாகும். அதைப் பெற்றவர் உரிய முறையில் தனது கடமையைச் செய்யாவிடில் மறுமையில் அதுவே அவர் கைசேதப்படுவதற்கும் கேவலப்படுவதற்கும் காரணமாகிவிடும் என்றார்கள்' (முஸ்லிம் 3463)

எனவே, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா பின்வரும் விடயங்களை அல்லாஹ்வுக்காக அவசியம் கடைபிடிக்குமாறு அனைவருக்கும் நஸீஹத் - நல்லுபதேசம் வழங்குகிறது. 

1. 40 வருடங்களுக்கும் மேலாக காத்தான்குடியில் சமூகப்பணி செய்துவரும் ஜம்இய்யதுல் உலமா எவ்வித அரசியல் சாயமும் சார்பு நிலையுமற்ற மார்க்க நிறுவனமாகையால் அது எந்தக் கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவாகவோ எதிராகவோ செயற்படாது. யாரும் ஜம்இய்யாவின் பெயரை தேர்தல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்த வேண்டாம்.

2. ஜனநாயக நாடொன்றில் பல கட்சிகள் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடலாம். யாரும் யாரையும் ஆதரிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமும் உரிமையுமாகும். எனினும் வாக்குகளை நன்கு சிந்தித்து மஸூராச் செய்து அளிக்க வேண்டும். முஸ்லிம் உம்மத்திற்கும் தீனுக்கும் யாரால் நிறைய நன்மைகள் கிட்டவுள்ளதோ அவரை தெரிவு செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துவிட்டு வாக்களிக்க வேண்டும். மேலும் வேட்பாளரைத் தெரிவு செய்யும் போது அவரது இறையச்சம், அமானிதம் பேணும் தன்மை, நேர்மை, தூரநோக்கு முஸ்லிம்களின் நலன்களிலான அவரது ஈடுபாடு போன்ற விடயங்களைக் கருத்திற்கொள்வதோடு, தமது அற்ப நலன்களை முன்னுரிமைப்படுத்தி செயற்படாதிருத்தல் வேண்டும். 

3. எமது வாக்குச்சீட்டு அமானத் (நம்பிக்கை), ஷஹாதத் (சாட்சி கூறல்) எனும் மிகப் பெரும் இஸ்லாமிய கடமைகளாகும். எனவே, தனிப்பட்ட அற்ப நலன்களுக்கு அப்பால் முஸ்லிம்களுக்கும், நாட்டுக்கும், எமது பிரதேசத்திற்கும் பயன்படும் வகையில் எமது வாக்குகளை அளிப்பதுடன் குடும்பத் தலைவர்கள் தாம் பெற்ற மார்க்க வழிகாட்டல்கள், அறிவுரைகளை தங்கள் குடும்பப் பெண்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களது வாக்குரிமையையும், அரசியல் தொடர்பான தொடர்பாடல்களையும் மிகச்சரிவர அமைத்துக்கொள்வதற்கு உதவிபுரிய வேண்டும். 

4. இறைநாட்டத்தின் (கழாவின்) படியே அனைத்தும் நடக்குமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பதால் அல்லாஹ்வின் நாட்டம் எப்படியிருக்கின்றதோ அதை நாம் பொருந்திக் கொள்ள வேண்டும். வெற்றி பெற்றவர் யாராயினும் அவருக்காக இறைவனிடம் பிரார்த்தித்து அவருக்கு நஸீஹத் செய்து நல்ல விடயங்களில் அவருக்கு ஒத்துழைப்பும் நல்க வேண்டும். தான் ஆதரித்தவர் வெற்றி பெறாததால் அதிகப்படியான முஸ்லிம்களின் தெரிவை ஏற்றுக்கொள்ள மறுப்பது மிகப்பெரும் தவறாகும். அவ்வாறே வெற்றி பெற்ற அணியினர் வெற்றிக் களிப்பால் அல்லாஹ்வை மறந்து அகம்பாவத்துடன் இஸ்லாம் தடுக்கும் வெற்றியூர்வலம், வெடி, பட்டாசு, அனாச்சாரங்கள், அட்டகாசங்கள் எதிலும் ஈடுபடாமல் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ள வேண்டும்.

5. ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமின் சகோதரன் என்ற வகையில் எமது சகோதரத்துவத்தைப் பாதிக்கும் எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. குறிப்பாக ஒரு முஸ்லிமின் உயிர், பொருள், மானம், மரியாதை என்பன அடுத்த முஸ்லிமுக்கு ஹராம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். 

6. நம் ஒவ்வொருவரினதும் இவ்வுலக மறுவுலக வாழ்வின் வெற்றி நிம்மதி சந்தேசமெல்லாம் நாம் இஸ்லாத்தை எந்தளவு கடைப்பிடிக்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது. இஸ்லாம் தடுத்த நம் மனச்சாட்சிக்கு விரோதமான நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் அதற்கு நிகரான பின்விளைவுகளையும் சந்தித்தே ஆக வேணடும். அது கப்றுக்குள்ளோ, மறுமையிலோ ஏற்படலாம், அல்லது இவ்வுலகிலேயே நமக்கோ நமக்கு வேண்டப்பட்டவருக்கோ ஒரு ஆபத்து, சோதனை வடிவில் ஏற்படலாம். வினை விதைத்தவன் வினையை அனுபவித்தே ஆக வேண்டும். 

எனவே ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமுக்கு சகோதரர் என்ற வகையில் குறிப்பாக தேர்தல் காலங்களில் இஸ்லாம் வலியுறுத்திய சமத்துவம், சகோதரத்துவம், ஒறு;றுமை, நற்பண்புகளைக் கடைபிடித்து உலக விடயத்திற்காக மறுமை வாழ்வைப் பாழ்படுத்தி விடாது அல்லாஹ்வைப் பயந்து நடந்துகொள்வோமாக  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஏம்.ஐ.அப்துல் நஸார்