இன்று தொடங்கும் தபால்மூல வாக்களிப்பு
அரசாங்க உத்தியோகஸ்தர்கள், தங்களது வாக்குகளை தபால் மூலம் பதிவு செய்வதற்கு 3 நாட்கள் ஒதுக்கிக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்களில் வாக்களிக்கத் தவறும் உத்தியோகஸ்தர்கள், எதிர்வரும் 8ஆம் திகதியன்று, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அலுவலகத்தில் தங்களது தபால்மூல வாக்குகளை அளிப்பதற்கான மேலதிக நாளொன்று வழங்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் அரசாங்க பாடசாலைகளில் தொழில் புரியும் ஆசிரியர்களுக்கு இன்று திங்கட்கிழமை (03) தபால் மூல வாக்களிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகஸ்தர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு ஓகஸ்ட் மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நடைபெறும்.
இம்மாதம் 17ஆம் திகதி, பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக தபால்மூலம் வாக்களிப்பதற்கு 566,823 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



