ரஜினி முருகன் ரிலீஸ் தள்ளிப் போவது ஏன்.? - வருத்தத்தில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'ரஜினி முருகன்' வெளியீடு தள்ளி வைப்புக்கான காரணம் ஈராஸ் நிறுவனம் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது. 'ரஜினி முருகன்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். சென்சார் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து படத்தை செப்டம்பர் 17ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், திருப்பதி பிரதர்ஸ் கடன் பிரச்சினைகள் காரணமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பிரச்சினை முடிவுற்று வெளியீட்டு தேதியை அறிவிப்பார்கள் என பலரும் காத்திருக்கிறார்கள். செப்டம்பட் 17ம் தேதி படம் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரித்த போது, "முதல் காரணம் ஈராஸ் நிறுவனம் தான். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அவர்களுக்கு பெரும் தொகை கொடுக்க வேண்டியதிருக்கிறது. பணம் கொடுத்த மற்றவர்களோ இப்படம் வெளியானால் தான் அந்நிறுவனத்துக்கு பணம் வரும் என்பதால் வெளியீட்டில் தலையிடவில்லை. ஆனால், ஈராஸ் நிறுவனம் பணம் கொடுத்தால் மட்டுமே தங்களால் அனுமதி அளிக்க முடியும் என்று கூறிவிட்டது. லிங்குசாமியும் மும்பைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அந்நிறுவனமோ, வட்டியுடன் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே வெளியீடு என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அபிராமி ராமநாதன் மூலமாக ஈராஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கும் மறுத்துவிட்டது ஈராஸ் நிறுவனம். ஈராஸ் நிறுவனத்தின் கடனை அடைத்தால் மட்டுமே 'ரஜினி முருகன்' வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது" என்றார்கள். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு 'உத்தம வில்லன்' வெளியீட்டின் போதும், ஈராஸ் நிறுவனத்தால் தான் தாமதமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அக்டோபர் 21ம் தேதி 'ரஜினி முருகன்' படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்.