Breaking News

பாடசாலை மாணவர்களுக்கு தபால் அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை-படங்கள்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண அஞ்சல் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தபால் அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவை அண்மையில் மட்டக்களப்பு அரசடி மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி பாடசாலை மாணவர்களுக்கு தபால் அடையாள அட்டை வழங்கும் நடமாடும் சேவையில் கிழக்கு மாகாண அஞ்சல் திணைக்களத்தின் பிராந்திய நிருவாக அலுவலகர் சீ.அருள்செல்வம், மட்டக்களப்பு பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகத்தின் பிரதம இலிகிதர் ஏ.சுகுமார்,அஞ்சல் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிர்வாக அலுவலகத்தின் பதவி நிலை உதவியாளர் கே.செந்தில்குமார்,மட்டக்களப்பு பிரதம தபால் அதிபர் எம்.ஜெயரெட்ணம் உட்பட மட்டக்களப்பு பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் கிழக்கு மாகாண அஞ்சல் திணைக்களத்தின் அதிகாரிகள்,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை மாணவர்களுக்கு தபால் அடையாள அட்டையை கிழக்கு மாகாண அஞ்சல் திணைக்களத்தின் பிராந்திய நிருவாக அலுவலகர் சீ.அருள்செல்வம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு தபால் அடையாள அட்டை வழங்கும் நோக்கில் இடம்பெறும் குறித்த நடமாடும் சேவையில் சுமார் 600 மாணவர்களுக்கு தபால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இத் தபால் அடையாள அட்டையை பெறுவதற்கு 16வயதுக்கு குறைந்த தேசிய அடையாள அட்டை பெற முடியாத பாடசாலை மாணவர்கள் தகுதி பெறுவார்கள்.

குறித்த நடமாடும் சேவை நடைபெறுவதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு அன்றைய தினம் தபால் அடையாள அட்டை வழங்கப்படுவதோடு அதன் மூலம் தங்களது அடையாளத்தை உறுதிபடுத்தி மாணவர்கள் இழகுவாக அரச மற்றும் தனியார் பரீட்சைகளுக்கு தோற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.