Breaking News

தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை ‘ஜிகா’ வைரஸ் அழிக்கிறது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

ஆய்வாளர்கள் முதலில் நினைத்ததைவிட ஜிகா வைரஸ் பயங்கரமானது என அமெரிக்க பொது சுகாதார மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜிகா வைரசின் தன்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் டாக்டர் அன்னே சுஷாட் உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில், “பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறப்பதற்கு ஜிகா வைரசுக்கு தொடர்பு உள்ளது. முன்பு கணிக்கப்பட்டதைவிட ஜிகா வைரஸ் பரப்பும் நுளம்புகளுக்கு அமெரிக்காவில் அதிக மாகாணங்களில் பரவியிருக்கலாம். அமெரிக்காவில் குறைபாடுடன் குழந்தைகள் பிறந்து உள்ளதற்கு ஜிகா வைரஸ் தொடர்பு உள்ளது. இதுவரையில் வைரஸ் தொடர்பாக நமக்கு தெரியவந்துள்ள தகவலின்படி நினைத்ததை விட பயங்கரமானது என்பதை காட்டுகிறது” என்றார்.

இவ்வருட தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, வைரசை எதிர்க்கொள்ள உடனடி நிதியாக 1.8 பில்லியல் டாலர் நிதியை ஒதுக்க அமெரிக்க காங்கிரசிடம் கேட்டுக் கொண்டார். ‘ஜிகா’ வைரஸ் தடுப்பு விவகாரத்தில் போதுமான பணிகள் செய்யப்பட்டு உள்ளது. நுளம்புகளுக்கு  எதிரான இந்த போராட்டத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கும் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கும் அமெரிக்காவிற்கு அதிகமான பணத்தேவை (1.9 பில்லியன் டாலர் மதிப்பு) உள்ளது. பீதி அடையவேண்டிய தேவையில்லை, எப்படி தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை ‘ஜிகா’ வைரஸ் அழிக்கிறது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.  

‘ஜிகா’ வைரஸ் பெரியவர்களுக்கும் அரிதான நரம்பியல் பிரச்சனையும் ஏற்படுத்துகிறது என்று டாக்டர் அந்தோணி பவுசி கூறியுள்ளார். 

டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, நுளம்புகளினால்  ‘ஜிகா’ வைரஸ் தொற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1947–ம் ஆண்டு உகாண்டாவில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரியவந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், தான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. 

அதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளிலும் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.