Breaking News

இலங்கையில் முதலீடு செய்ய சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் இணக்கம்

சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் இலங்கையில் முதலீடு செய்யவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். இதற்கமைய அவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அரச மட்ட உயர் அதிகாரிகளுடன் இரு தரப்பு பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவூதி அரேபிய சென்றுள்ள ஹிரா பௌண்டேசன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் நேற்று சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசல் பின் அப்துல் மஜீத் அஸ் சவூதை ஜிந்தாவில் அமைந்துள்ள அவரது மாளிகையில் சந்தித்து  கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது குறிப்பாக சர்வதேசரீதியிலே பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளிலே ஈடுபாடு கொண்ட இளவரசர் அப்துல் அஸீஸ் பின் பைசலை இலங்கையிலும் முதலீடு செய்யும்மாறும், இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யுமாறும் இராஜாங்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
 இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இளவரசர் உடனடியாக இலங்கைக்கு விஜயம் செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை மேற்கொண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு தன்னுடைய முழுப் பங்களிப்பை செய்வதாக உறுதியளித்தார்.
 அதேபோன்று, அமைக்கபட்டுவரும் மட்டகளப்பு பல்கலைக்கழகம் தொடர்பாகவும் இளவரசருக்கு இராஜாங்க அமைச்சர் விளக்கமளித்திருந்ததுடன்,  அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக இளவரசர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில்,
“ சவூதி இளவரசர்கள் சர்வதேச ரீதியில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே தங்களது பாரிய பொருளாதார பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் முதலீடு செய்யுமாறு நாங்கள் முன்வைத்த கோரிக்கையினை  ஏற்றுக் கொண்ட அவர், இது தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவதாகவும் எம்மிடம் வாக்குறுது வழங்கினார்- என்றார்.
இந்த சந்திப்பில் அப்துல் காதர் மசூர் மௌலானா மற்றும் ஹிரா பௌண்டேசன் செயலாளர் மும்தாஸ் மதனி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.