கணிதப் பாட ஆசிரியர் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து பாலமுனையில் பாடசாலை நுழைவாயில் கதவை மூடி ஆர்ப்பாட்டம்-படங்கள்
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஆரையம்பதி-பாலமுனை அஷ்ரப் வித்தியாலத்திலுள்ள கணிதப் பாட ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்தும் அவரின் இடமாற்றத்தை நிறுத்துமாமாறும் கோரி அவ்வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று 19 வியாழக்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களும்,அவர்களின் பெற்றோர்களும் மேற்படி வித்தியாலயத்தின் நுழைவாயில் கதவை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வேண்டாம் வேண்டாம் எமது ஆசிரியர்களின் இடமாற்றம் வேண்டாம்,கணித பாட ஆசிரியரின் இட மாற்றத்தை நிறுத்து,ஏழை மாணவர்களின் கல்வியில் விளையாடாதே,டி.ஈ.ஓ (பிரதேச கல்விப் பணிப்பாளர்) அவர்களே .அதிபராக இருந்து பாடசாலைகளை சீரழித்தது போன்று இப்போதும் செய்யாதே, டி.ஈ.ஓ (பிரதேச கல்விப் பணிப்பாளர்) அவர்களே எமது பாடசாலை கல்வித் தரத்தை சீரழிக்காதே போன்ற பல்வேறு தமிழ் மொழியிலான பதாதைகளை ஏந்தி தமது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 553 மாணவர்கள் கல்வி கற்று வருகின்ற குறித்த வித்தியாலயத்திற்கு 26 ஆசிரியர்கள் தேவையாக உள்ளதோடு 18 ஆசிரியர்களே தற்போது கடமையாற்றுகின்றனர் எனவும் விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட ஏனைய சில பாடங்களுக்கும்
ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் எனவும் அஷ்ரப் வித்தியாலயத்தின்; பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளரும்,முன்னாள் ஆரையம்பதி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஐ.முபாறக் ஜேபி தெரிவித்தார்.
இது தொடர்பாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'மேற்படி வித்தியாலயத்தில் கணிதபாட ஆசிரியர்கள் இரண்டு பேர் உள்ளனர் இவர்களில் ஒருவரை கணித பாடத்துக்கு ஆசிரியர்கள் எவரும் இல்லாத பாடசாலையான காங்கேயனோடை அல்-அக்ஷா வித்தியாலயத்திற்கு மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக மாற்றியுள்ளோம்.
எனினும், இவர்கள் அதை விரும்பாத காரணத்தினால் இவர்களின் கோரிக்கை தொடர்பில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.சேகு அலி,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் செய்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்தையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.