Breaking News

கொலம்பியாவை வென்ற சிலி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

45-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் அரை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 4-0 என்ற கோல்கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

2-வது அரை இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் சிலி - கொலம்பியா அணிகள் மோதின.

இதில் சிலி அணி 2-0 என்ற கோல்கணக்கில் கொலம்பியாவை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் சிலி முதல் கோலை அடித்தது. சார்லஸ் அரன்குயிங் இந்த கோலை அடித்தார். 11-வது நிமிடத்தில் சிலி வீரர் ஜோஸ் பெட்ரோ 2-வது கோலை அடித்தார். ஆட்டம் இறுதி வரை கொலம்பிய அணியால் பதில் கோல் போட முடியாமல் போனது பரிதாபமே.

சிலி அணி 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் 27-ந்தேதி நடக்கிறது.

கடந்த ஆண்டு கோபா அமெரிக்க இறுதி போட்டியில் இந்த இரு அணிகளுமே மோதின. இதில் சிலி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. தற்போது இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மீண்டும் மோதுகின்றன.

3-வது இடத்துக்கான ஆட்டம் 26-ந்தேதி நடக்கிறது. இதில் கொலம்பியா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.