சிட்னி வைத்தியசாலையில் சிரிப்பூட்டும் வாயுவினால் சிசு பலி
ஆவுஸ்திரேலியாவில் சிட்னி நகரில் ‘பேங்க்ஸ்டவுன்-லிட்காம்பி’ ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் புதிதாக பிறந்த 2 சிசுக்களுக்கு ஆக்சிஜன் வாயு செலுத்துவதற்கு பதிலாக தவறுதலாக நைட்ரஸ் ஆக்சைடு (சிரிப்பூட்டும் வாயு) செலுத்தி விட்டனர்.
இதில் ஒரு சிசு பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு சிசுவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி ஜில்லியன் ஸ்கின்னர் கூறும்போது, “ இந்த சம்பவம் மிகுந்த வேதனையை தருகிறது. இது துயரமான ஒரு தவறு. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
இருப்பினும் இந்த துயர சம்பவம் நடந்தபோது, மந்திரி ஸ்கின்னர் ஒரு விழாவில் பங்கேற்றது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வாயு வரவேண்டிய குழாயில் நைட்ரஸ் ஆக்சைடு வந்ததுதான் தவறுக்கு காரணம் என கூறப்படுகிறது.



