2016ம் ஆண்டிற்கான குரு பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்
பிரச்சனைகளை கண்டு அஞ்சாதவர்களே! இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு உங்களை எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க விடாமல் திணறடித்ததுடன், கைக்கு எட்டியதையெல்லாம் வாய்க்கு எட்ட விடாமல் தடுத்து, தாயாருடன் மனஸ்தாபங்களையும், அவருக்கு ஆரோக்யக் குறைகளையும் ஏற்படுத்தி வந்த குருபகவான் 02.08.2016 முதல் 01.09.2017 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார்.
இனி எதிலும் வெற்றி உண்டாகும். உங்களுடைய அடிப்படை வசதி, வாய்ப்புகளும் அதிகமாகும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்யுமளவிற்கு பணவரவு அதிகரிக்கும். வருடக் கணக்கில், மாதக் கணக்கில், நாள் கணக்கில் கிடப்பில் கிடந்த காரியங்களெல்லாம் இனி அடுத்தடுத்து முடிவடையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சோர்ந்திருந்த முகம் மலரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
கணவன்-மனைவிக்குள் நிலவி வந்தப் பனிப்போர் நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். எத்தனையோ, கோவில் குலம் சுற்றியும், எவ்வளவோ மருத்துவரை அணுகி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களே! இனி அழகு, அறிவுள்ள குழந்தை பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்துப் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்திலிருந்து மணமகன் அமைவார். திருமணமும் முடியும். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் உங்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் யார் என்பதை உணர்ந்து அவர்களிடம் மட்டும் இனி உறவுக் கொண்டாடுவீர்கள். தாயாருடனான மோதல்கள், அவருக்குக் இருந்து வந்த மருத்துவச் செலவுகளெல்லாம் விலகும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். எதிர்தரப்பினர் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆழ்ந்த உறக்கமும் வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் தோற்றப் பொலிவுக் கூடும். கோபம் குறையும் இனி சாந்தமாவீர்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாரின் உடல் நிலை சீராகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள்.
உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் தொட்ட காரியம் துலங்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புது பதவிக்கு உங்களுடைய பெரிய பரிந்துரை செய்யப்படும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 02.8.2016 முதல் 19.9.2016 வரை குருபகவான் பயணிப்பதால் தள்ளிப் போன வேலைகள் முடியும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். சிலர் இருக்கும் வீட்டை இடித்து கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். வங்கிக் கடன் உதவி கிட்டும். பெற்றோரின் ஆரோக்யம் சீராகும். அரசால் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படத் தொடங்குவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். நவீனரக வாகனம் மற்றும் கைப்பேசி வாங்குவீர்கள். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்களை அவமதித்தவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள்.
உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை குருபகவான் செல்வதால் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார். மனைவிவழி உறவினர்களும் உறுதுணையாக இருப்பார்கள். திடீர் பயணங்களால் செலவுகள் இருக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால் குடும்பத்தில் சின்ன சின்ன குழப்பங்கள் வரக்கூடும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துப் போகும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஒற்றை தலை வலி, காலில் அடிப்படுதல், சிறுநீர் பாதையில் அழற்சி, தோலில் தடிப்பு, பசியின்மை, தூக்கமின்மை வந்துச் செல்லும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் சுபச் செலவுகள் அதிகமாகும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். மாற்றுமொழிப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்களின் பிடிவாதப் போக்கு மாறும். உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கடையை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிரபலமான இடத்திற்கு சிலர் மாற்றுவீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் புது பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ரியல் எஸ்டேட், மூலிகை, ஏற்றுமதி-இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபம் வரும். தொல்லை தந்த பங்குதாரரை மாற்றிவிட்டு புதியவரை சேர்ப்பீர்கள்.
உத்யோகத்தில் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டீர்களே! அடிக்கடி அவமானப்படுத்தப்பட்டீர்களே! அதிக நேரம் உழைத்தும் அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் அல்லாடினீர்களே! இனி அலுவலகத்தில் நிம்மதி கிட்டும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் இனி மதிக்கத் தொடங்குவார்கள். வேலைச்சுமை குறையும். உயரதிகாரிகளும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுத் தேடி வரும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதலும் கனியும். கல்யாணமும் கூடி வரும். போலித்தனமாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். விடுபட்ட பாடத்தை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் உத்யோகம் அமையும். பெற்றோரின் கனவுகளை நனவாக்குவீர்கள். தாயாருடனான இடைவெளி குறையும்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள். ஆசிரியரின் நன்மதிப்பை பெறுவீர்கள். விளையாட்டிலும் பதக்கம் பெறுவீர்கள்.
கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய கலைத் திறன் வளரும்.
அரசியல்வாதிகளே! தலைமைக்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். கட்சிக்குள் இருந்த சலகலப்புகள் நீங்கும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
ஆகமொத்தம் இந்த குருமாற்றம் வருமானத்தையும், வசதி, வாய்ப்புகளையும் பெற்று தரும்.
பரிகாரம்:
மேல்மருவத்தூர் அருகிலுள்ள அச்சிறுப்பாக்கம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆட்சீஸ்வரர் மற்றும் உமையாட்சீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.
அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றி தந்ததுடன், சமூகத்தில் ஓருபடி அந்தஸ்தை உயர்த்திய குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். 'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே! எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும், வீண் பழிகளையும் உண்டாக்குவாரே! என்று கலங்காதீர்கள்.
அதன்படி எதிலும் சின்ன சின்ன இழப்பங்களும், மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதற்காக அஞ்ச வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். செலவினங்கள் அதிகமாகும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வயிற்று உப்புசம், சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். சில பல நோய்கள் இருப்பதாக யூகிப்பீர்கள். உரிய மருத்துவரை அணுகி தக்க சமயத்தில் மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது.
சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் சச்சரவுகள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். உறவினர்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்து உதவினாலும் நமக்கு நல்ல பெயர் இல்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். பல காலமாக நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொண்டு விலகுவார்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.
உங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள். கவனமாக இருங்கள். முக்கிய நிகழ்ச்சிகளை தவிர மற்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பாதை மாறிச் செல்பவர்களின் நட்பை தவிர்த்து விடுங்கள். தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. கடனை நினைத்தும் கலங்குவீர்கள். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள்.
காலமெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தானா, மகிழ்ச்சியே வாழ்க்கையில் இருக்காதா என்றெல்லாம் புலம்புவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கோர்ட், வழக்கு என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு, கர்பப்பை வீக்கம், அப்ரண்டீஸ் வரக்கூடும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கவோ, சாலைகளைக் கடக்கவோ வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வங்கிக் கணக்கில் இருப்பை அறிந்து கொண்டு காசோலை கொடுங்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால் இழுபறி நிலை மாறும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வருமோ, வராதோ என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்தப் பிணக்குகள் நீங்கும். மற்றவர்களின் மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். தேங்கிக் கிடந்த வழக்கில் வெற்றியுண்டு. ஆரோக்யம் சீராகும்.
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் மாறுபட்ட யோசனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று அப்பாயிண்ட் ஆர்டருக்காக காத்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். டிரெஸ்ட், சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் எடுத்து நடத்துவீர்கள். வேற்று மதத்தவர், மாநிலத்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
02.8.2016 முதல் 19.9.2016 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அதிக வட்டிக் கடனை தீர்க்க புதுவழி பிறக்கும். நட்பு வட்டம் விரியும்.
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப் புகுவீர்கள். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான கசப்புணர்வுகளும் நீங்கும். கலை, இசையில் நாட்டம் அதிகரிக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். கோழித்தூக்கம் போய், இனி நிம்மதியான குறட்டைத் தூக்கம் வரும்.
25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மனைவிவழியில் மதிப்புக் கூடும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, சகோதர வகையில் மனவருத்தம், சிறுசிறு நெருப்புக் காயங்கள், இனந்தெரியாத கவலை, சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள், வழக்கால் நிம்மதியின்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். ஆனால் பணவரவு குறையாது. முன்னேற்றம் தடைபடாது.
வியாபாரிகளே! ஏற்ற-இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி எந்த முதலீடுகளும் செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். வேலையாட்களை வேலைக்கு வைக்கும் போது அவர்களை நன்றாக விசாரித்துவிட்டு பணியில் சேர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அறிமுகம் செய்து வைப்பவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். கடையை மாற்ற வேண்டாம். இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. கமிஷன், உணவு, மருந்து, கன்சல்டன்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். தன்நிலையை தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருக்கும். உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். அவர்களிடம் உஷாசாராக இருங்கள்.
நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். நீங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்தை வேறு நிறுவனம் வாங்க வாய்ப்பிருக்கிறது. விரும்பத்தகாத இடமாற்றங்களெல்லாம் வந்துப் போகும். உங்கள் மீது சிலர் வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது. நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுகளெல்லாம் சற்று தாமதமாகும்.
கன்னிப் பெண்களே! கல்யாணம் தாமதமாகும். காதல் விஷயத்திலும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் போகும். கொஞ்சம் தள்ளியே இருங்கள். எஸ்.எம்.எஸ்., இமெயிலை கவனமாக கையாளுங்கள். முன்பின் தெரியாத நபர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தைராய்டு பிரச்னை, வயிற்று வலி, தோலில் அலர்ஜி வந்துப் போகும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். சிலருக்கு வேலை அமையும்.
மாணவ-மாணவிகளே! தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.
கலைத்துறையினரே! போட்டிகள் இருக்கும். வதந்திகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.
அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி மேடையில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்குவீர்கள். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.
இந்த குருமாற்றம் முயன்று தவறி ஒரளவு முன்னேற வைக்கும்.
பரிகாரம்:
உளுந்தூர் பேட்டைக்கு அருகில் பரிக்கல் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை துவாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியவருக்கு உதவுங்கள்.



