Breaking News

ஐரோப்பிய கால்பந்தில் 2-வது அரைஇறுதிபோட்டியில் ஜெர்மனி உடன் பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை

பிரான்சில் நடந்து வரும் 15-வது ஐரோப்பிய கால்பந்து திருவிழா (யூரோ) இறுதி கட்டத்தை எட்டி விட்டது. மார்செலி நகரில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் உலக சாம்பியன் ஜெர்மனியும், முன்னாள் உலக சாம்பியன் பிரான்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பலம் வாய்ந்த ஜெர்மனி அணிக்கு நட்சத்திர வீரர்களின் காயம் பெரும் தலைவலியாக உள்ளது. காயத்தால் அவதிப்படும் மரியோ கோம்ஸ், சமி கேதிரா ஆகியோர் அரைஇறுதியில் ஆடமாட்டார்கள் என்று ஜெர்மனி பயிற்சியாளர் ஜோசிம் லோ கூறியுள்ளார். 

இத்தாலிக்கு எதிரான கால்இறுதியின் போது 2-வது முறையாக மஞ்சள் அட்டை பெற்ற மாட்ஸ் ஹம்மல்ஸ் இந்த ஆட்டத்தில் விளையாட முடியாது. இதே போல் கேப்டன் பாஸ்டியன் ஸ்வெய்ன்டீகரும் முழங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரும் களம் இறங்குவது சந்தேகம் தான். இதனால் உலக கோப்பையில் வெற்றிக்கான கோலை அடித்தவரான மரியோ கோட்சேவை ஆரம்பத்திலேயே களத்தில் இறக்க பயிற்சியாளர் முடிவு செய்துள்ளார்.

முன்னணி வீரர்களின் காயத்தால் ஜெர்மனி அணி தாமஸ் முல்லர், டோனி குரூஸ், ஒசில் ஆகியோரைத் தான் அதிகமாக சார்ந்து இருக்கிறது.

தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் எப்போதும் சொந்த மண்ணில் அட்டகாசப்படுத்தக்கூடிய ஒரு அணி. கால்இறுதியில் ஐஸ்லாந்தை பந்தாடிய உற்சாகத்தில் உள்ள பிரான்ஸ் வீரர்கள் அதே உத்வேகத்துடன் ஜெர்மனியையும் போட்டுத் தாக்க தீவிரமாக உள்ளனர். ஆலிவியர் ஜிராட் (3 கோல்), ஆன்டோனி கிரிஸ்மான் (4 கோல்), டிமிட்ரி பயேத் (3 கோல்) உள்ளிட்டோர் பிரான்ஸ் அணியின் ஆணிவேராக விளங்குகிறார்கள்.

பிரான்ஸ் அணி தனது கடைசி 9 சர்வதேச போட்டிகளில் தோற்றதில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு கூடுதல் உந்துசக்தியாக இருக்கும்.

ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் கூறும் போது, ‘எங்களை பொறுத்தவரை எங்களுக்கு எந்த பயமும் இல்லை. தனிப்பட்ட முறையில் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணி பிரான்ஸ் என்பதை அறிவோம். ஆனால் உள்ளூரில் ஆடுவது அவர்களுக்கு நெருக்கடியாக இருக்கும். வீரர்கள் காயப்பிரச்சினையை எங்களால் திறம்பட சமாளிக்க முடியும் என்று நம்புகிறோம்’ என்றார்.

நடப்பு தொடரில் ஒரே ஒரு கோலை மட்டுமே விட்டுகொடுத்துள்ள ஜெர்மனி கோல் கீப்பர் மானுவல் நீயர் கூறும் போது, ‘பிரான்ஸ் அணியில் ஜிராட் கோல் அடிப்பதில் கில்லாடி. கோல் பகுதிக்குள் நுழைந்து விட்டாலே அபாயகரமான வீரராக மாறி விடுவார். ஆனால் அவரை தவிர்த்து மேலும் பல திறமையான வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்’ என்றார்.

2014-ம் ஆண்டு உலக கோப்பை கால்இறுதியில் பிரான்ஸ் அணி, 0-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் உதை வாங்கியது. அந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பழிதீர்க்கும் துடிப்புடன் பிரான்ஸ் வீரர்கள் காத்திருக்கிறார்கள். இதனால் இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

இவ்விரு அணிகளும் இதுவரை 27 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 9-ல் ஜெர்மனியும், 12-ல் பிரான்சும் வெற்றி கண்டுள்ளன. 6 ஆட்டம் டிரா ஆனது.

இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.