Breaking News

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய மாடிக் கட்டிடம் 45 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்ட பாடசாலையான லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய மாடிக் கட்டிடம் கிழக்கு மாகாண சபையின் 45 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.

சுனாமியின் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 90’ X 25’ அளவுடைய இரண்டு மாடி வகுப்பறைக் கட்டிடம் ஒன்று இப் பாடசாலையில் அவலட்சணமாகக் காணப்பட்டுவந்தது.

பாடசாலையில் நிலவிவரும் வகுப்பறைத் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு இக் கட்டிடத்தினை புனரமைக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அதனோடு மாணவர் தளர்பாடப் பற்றாக்குறை, மலசலகூடப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பௌதீக குறைபாடுகள் தொடர்பாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸின் தலைமையில் பாடசாலை அபிவிருத்திக் குழுவினால் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். ஏ. ஜலீல் ஊடாக மாகாணக் கல்விப் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ நிஸாம் அவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, குறித்த கட்டடத்தையும் நிலவும் பௌதீக வள தேவைகள் பற்றியும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் நேரடியாக பார்வையிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றார்.

இதனையடுத்து, முதல்வரினால் பாடசாலைக்கு 45 இலட்சம் ரூபா நிதி மாகாண சபையினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்டு இம்மாடிக் கட்டிடம் மிகவும் கச்சிதமாகவும் அழகாகவும் புனரமைக்கப்பட்டுள்ளதன் விளைவாக பாடசாலையின் வகுப்பறைத் தட்டுப்பாடு நீங்கியுள்ளதுடன் அழகிய தோற்றத்தையும் பெற்றுள்ளது.

புனரமைக்கப்பட்டுள்ள இம்மாடிக் கட்டிடம் மிக விரைவில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் கோலாகலமாக திறந்துவைக்கப்படவுள்ளது.

இக் கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உதவிய கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கும் பாடசாலையின் அபிவிருத்திக் குழு , பாடசாலை சமூகம் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.