Breaking News

தடையை மீறி கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூன்றினை பரிசோதித்து வடகொரியா !!!

சர்வதேச தடையை அத்துமீறிய வகையில் இன்று வடகொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும், கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து நடத்தி வருகிறது.

அந்தநாடு தொடர்ந்து 3 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி, அதிரடியாக அணுகுண்டை விட பல மடங்கு சக்திமிக்க ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதித்தது. இதுவும் அணுகுண்டு வகையில்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்படி அந்த நாடு இதுவரை 4 முறை அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளதாக சர்வதேச நாடுகள் பதிவு செய்துள்ளன.

இதன்காரணமாக, வடகொரியா மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் மிகக்கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனாலும் அந்த நாடு, தற்காப்பு என்ற பெயரில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை விடாமல் நடத்தி வருகிறது.

அவ்வகையில், இந்திய நேரப்படி இன்று காலை சுமார் 8.30 மணியளவில் அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளது.

ஹுவாங்ஜு பகுதியில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் ஜப்பானில் உள்ள கிழக்கு கடலில் போய் விழுந்ததாக தென்கொரியா உளவு நிறுவனம் தெரிவித்த தகவல்களை மேற்கோள் காட்டி, செய்திகள் வெளியாகியுள்ளன.