Breaking News

தாய்நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் உறுதி பூணுவோம்! ஐ.தே.க. பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர்

இலங்கை தாய் நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றத்துக்காக அர்ப்பணிப்புக்களையும் தியாகங்களையும் செய்ய தியாகத் திருநாளில் முஸ்லிம்கள் அனைவரும் உறுதி பூணுவோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஷீம் தெரிவித்தார். 

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இப்ராஹீம் (அலை) மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த தியாகங்களை உணர்த்தும் ஹஜ், முஸ்லிம் சமூகத்துக்கு பல படிப்பினைகளை எடுத்துக்காட்டுகின்றது. 

இதனை இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமது வாழ்கையில் நடைமுறைப்படுத்தி நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றத்துக்காக தியாகங்களை செய்ய முன்வர வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம்  புரிந்துணர்வு ஏற்படுத்துவதற்கு பல திட்டங்களை செய்து வருகின்றனர். 

முஸ்லிம்கள் என்ற ரீதியில் அதற்கு எம்மாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். 

அரச காலத்தில் நாட்டில் ஏற்படும் பல பிரச்சினைகளை முறியடிப்பதற்கு அரசர்களுக்கு பக்கபலமாக முஸ்லிம்கள் இருந்துள்ளனர். அதேபோன்று, கடந்த காலங்களில் நாட்டின் இறையான்மைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களின் போதும் முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது. 

எனவே, இன்றைய தினம் தியாகத்திருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவரும் தாய் நாட்டின் அபிவிருத்தி  முன்னேற்றத்துக்காக எம்மாலான பங்களிப்புக்களை  அர்ப்பணிப்புக்களை  தியாகங்களை செய்வோம் என உறுதி பூணுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.