Breaking News

13 வயது மகளின் மானத்தைக் காக்கவென ஓடும் பஸ்ஸில் இருந்து மகளுடன் குதித்த தாய்..!

பஞ்சாப் மாநிலம், மோக மாவட்டத்தில் விவசாயி ஒருவரின் மனைவி (35) ஒருவர், தனது 14 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு பேருந்தில் பயணம் சென்று கொண்டு இருந்தார்.

மோகா நகர் அருகே பேருந்து சென்று கொண்டு இருக்கும்போது, அந்த பேருந்தின் 2 கண்டக்டர்களில் ஒருவர் அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். பேருந்தில் குறைவான பயணிகளே இருந்துள்ளனர்.

பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் அந்த பெண் முறையிட்டுள்ளார். ஆனால் டிரைவர் மட்டுமின்றி, பயணிகளும் இதை கண்டு கொள்ளவில்லை. நீண்ட நேரம் இந்த தொல்லை தொடர்ந்து கொண்டு இருந்துள்ளது.

பல முறை அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டக்டர் கேட்பதாக இல்லை. இதனால் பொறுமை இழந்த அந்த பெண் தனது மகளுடன் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து விட்டார். மகன் மட்டும் பேருந்தில் இருந்தார்.

முதலில் மகளை பேருந்தில் இருந்து வெளியே தள்ளிய பெண், பின்னர் தானும் பேருந்தில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே தாய்-மகளை பேருந்தில் வைத்து 6 பேர் தாக்கியதாகவும், அவர்களை ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில் காயம் அடைந்த தாய்-மகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 13 வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.