Breaking News

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஹோம்வொர்க் பண்ண 7 டிப்ஸ்

உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதா? உங்கள் குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய நாகப்பட்டினம், அரசுப்பள்ளி ஆசிரியை தேவகுமாரி தரும் எளிய டிப்ஸ்:

1. குழந்தைகளின் மூளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறலுக்கு உட்படும். எனவே வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை ஐந்து நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ அந்த நேரத்தில் அனுமதிக்காதீர்கள்.

2. குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கும்போது ஒரு பாடத்துக்கு இவ்வளவு நேரம் என்று அலாரம் வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள், சரியாகவும் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டால் சின்ன பரிசு ஒன்றைத் தந்து பாராட்டலாம். ஒரு வாரம் முழுக்க நேரத்துக்குள் முடித்துவிட்டால், பெரிய பரிசு அல்லது வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லலாம். இது அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதோடு நேர மேலாண்மை பழக்கத்தையும் ஏற்படுத்தும்.

3. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் வீட்டுப் பாடத்தை அட்டவணைப்படுத்துங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் கார்ட்டூன் கேரக்டரில் ஒரு கார்டு தயாரித்து அதில் எழுதுங்கள். இப்போது டோராவின் வீட்டுப் பாடம் முடிந்துவிட்டது. இனி சோட்டா பீமின் வீட்டுப் பாடம் மட்டுமே மீதம் இருக்கிறது என்று சொல்லுங்கள். இந்தப் புதிய அணுகுமுறை நல்ல மாற்றத்தை தரும்.

 4.குழந்தைகள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப பாடங்கள், செய்முறையுடன் கூடிய வீடியோக்களாக இணையத்தில் கிடைக்கிறது. வீட்டுப் பாடத்துக்கு ஏற்ற வீடியோவைப் பார்க்க செய்து, வீட்டுப் பாட நோட்டில் கூடுதலாக சில தகவல்களை எழுத செய்யலாம். அதை அடுத்தநாள் ஆசிரியர் பார்த்து பாராட்டும்போது அடுத்தடுத்த நாட்களில் வீட்டுப் பாடத்தை உற்சாகமாக எழுதுவார்கள்.ஆர்வத்துடன் எழுதும்போது அவர்களின் கையெழுத்தும், மெருகேறும்
      

5.உங்கள் பிள்ளையை, டியூசனில் வீட்டுப்பாடம் செய்ய அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்யும்போது பாடங்கள் புரியாமல் இருந்தால் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க ஆரம்பித்து விடுவர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு தாங்களே சுயமாக வீட்டுப் பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணம் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
                                                    
6. குழந்தைகளின் மனது அடிக்கடி மாற்றத்துக்கு உட்படக் கூடியது. அறிவியல் பாடம் எழுதிக்கொண்டிருக்கும்போதே, தமிழ் வீட்டுப் பாடம் செய்கிறேன் ப்ளீஸ் எனக் கேட்பார்கள். அப்படி கேட்கும்போது அவர்களுக்கு எதில் விருப்பம் ஏற்படுகிறதோ அதை செய்யட்டும் என்று விட்டுவிடுங்கள். இல்லையெனில் விருப்பம் இல்லாமல் தப்பும் தவறுமாக செய்து நேரத்தை தான் வீணடிப்பர். ஆனால் திரும்பவும் அறிவியல் பாடத்தையும் எழுத வைக்க மறக்காதீர்கள். 

7.குழந்தைகளுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதனைச் சார்ந்த  சுவாரஸ்யமான தகவல்களை இன்டர்நெட்டில் தேடுங்கள். அப்போது கிடைக்கும் தகவல்களை அதற்குரிய படங்களோடு, சார்ட் பேப்பரில் ஒட்டுங்கள். அதில் நூலைக் கட்டி, ஜன்னலில் தொங்க விடுங்கள். ஆனால் அதன்பின்புறம் தெரிவதுபோல தொங்க விடுங்கள். உங்கள் குழந்தையிடம் நீ விரைவராக வீட்டுப்பாடம் எழுதிவிட்டால், அதோடு தொடர்புடைய இந்தச் செய்தியைக் காட்டுவேன் எனச் சொல்லுங்கள். அது என்ன செய்தி எனும் ஆவலில் விரைவாக மட்டுமல்ல மகிழ்ச்சியோடும் வீட்டுப் பாடத்தை செய்வார்கள்.