Breaking News

அப்போலோ மருத்துவமனை கணனிகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன !!!

இந்திய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, விஜய் மல்லையா, பர்கா தத் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கங்களை ஹேக் செய்திருப்பது லீகியன் எனும் ஹேக்கர் குழுவினர் தான் என்பது சமீபத்தில் தெரியவந்திருக்கிறது. என்க்ரிப்ட் செய்யப்பட்ட குறுந்தகவல் தளத்தில் நடத்தப்பட்ட விவாதத்தில் இது குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்திருக்கிறது. 

அப்போலோ மருத்துவமனையின் சர்வர்களை லீகியன் குழுவினர் ஹேக் செய்திருப்பதாகவும், இத்தகவல்களை வெளியிட்டால் இந்தியாவில் இயல்பு நிலை பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பல்வேறு துறை சார்ந்து அதிகப்படியான தகவல்களை சேகரித்திருக்கும் லீகியன், இந்திய அரசியல் பிரபலங்கள் சார்ந்த பயனுள்ள தகவல்களை சேகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 40,000க்கும் அதிகமான சர்வர்களை ஹேக் செய்திருப்பதாகவும் இவ்வாறு சேகரித்த தகவல்களில் என்ன இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள பிரத்யேக முறையை கண்டறிந்திருப்பதோடு, இவ்வாறு கண்டறியும் தகவல்களை வெளியிடுவது குறித்து முடிவு செய்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்திய பிரபலங்களின் சமூக வலைத்தள கணக்குகளை ஹேக் செய்து வரும் லீகியன் குழுவின் அடுத்த இலக்கு முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். லீகியன் சார்ந்த இலக்குகள் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் இவை அனைத்தும் குற்றம் செய்தவர்களை வெளிச்சத்திற்கு அழைத்து வரும் வகையில் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.