Breaking News

சிரியாவில் அமைதி ஏற்படுத்தும் ரஷியா-துருக்கி முயற்சிக்கு ஐ.நா.பாதுகாப்பு சபை ஆதரவு !

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. தொடர்ந்து 6-வது ஆண்டாக நடைபெற்றுவரும் இந்த உள்நாட்டுப் போரில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் வீடுகளை விட்டு, உயிர் பிழைக்க இடம் பெயர்ந்தனர்.

இந்த நிலையில் ரஷியா, துருக்கி ஆதரவுடன் இரு தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. “இது உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்து, அரசியல் தீர்வு காண்பதற்கு உண்மையான வாய்ப்பாக அமையும்” என சிரியா அரசு கூறியுள்ளது.

இந்த சண்டை நிறுத்தம் டிசம்பர் 29-ம் தேதி இரவில் இருந்து அமலுக்கு வந்தது. போராளி குழுக்கள் மற்றும் சிரியா அரசு பிரதிநிதிகளிடையே இந்த மாதம் கஜகஸ்தான் நாட்டில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ரஷியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் இந்த முயற்சியை ஆதரித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘சிரியாவில் வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவும், அரசியல்ரீதியான தீர்வு காணவும் ரஷியா மற்றும் துருக்கி எடுத்துள்ள இந்த முயற்சிகளை வரவேற்று, ஆதரிக்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை ஆதரித்து, ஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம்வகிக்கும் 15 நாடுகளும் வாக்களித்தன.